பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/143

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

141



என்னையும் ஆட்கொண்டு விட்டாய். அதனால் வரைகிறேன். என்னை மட்டுமா ஆட்கொண்டாய்? சிந்தையை! சிந்தையை மட்டுமா? சிந்தை அணு ஒவ்வொன்றையும் உன் வயப்படுத்திக் கொண்டதால் அதையும் கூறிவிடுகிறேன்.

மயக்கும் மாலைப் பொழுதான அந்தி நேரத்திலே, தமிழக வீதிகளிலே நடைபெறும் பொதுக் கூட்டங்கள் தோறம் நீ உலா வருகிறாயே!

கூட்டத்திலே குழுமியுள்ள மக்களது உள்ளங்களை எல்லாம், நீ சிக்கி வைக்கிறாய்! கவருகிறாய்! கொள்ளை கொள்கிறாய்.

இதற்குக் காரணம் என்ன, உன் மீதுள்ள எல்லையற்ற பற்று: நீ வாடையா என்ன - வெறுப்பதற்கு? தென்றலல்லவா?

நீயும் தமிழ் மண்ணிலே பிறந்து நடமாடுகின்ற வளல்லவா? அதனால்தான் தமிழ் உணர்வோடு, கூடியிருக்கின்ற பல லட்ச மக்களின் உள்ளங்களிலே இரண்டறக் கலக்கும் பண்பு பெற்றிருக்கிறாய்!

வளர்கின்ற செந்நெல்லுக்கு மடைப்புனல் எப்படி அவசியமோ, அதைப்போல, வளர்கின்ற ஒரு சமுதாயத்திற்கு முதியவர்களும் அவசியமாகும்.

சமுதாய வளர்ச்சி சரியானதுதானா என்பதை அறிய - கற்றோர்களும் மற்றோர்களும் தேவை!

மடைப்புனல், நீரை எப்படி முறையாக அனுப்பி செந்நெல்லுக்கு உரம் ஊட்டுகிறதோ, அதேபோல பொது மக்களும் ஒரு சமுதாய வளர்ச்சிக்கு அவசியம்.

இதைத் தெளிவுற உணர்ந்ததால், தென்றலே! நீ பொது மக்கள் உள்ளங்களிலே எல்லாம் புகுந்து, கருத்துக் குளுமையைத் தவழவிடுகிறாய்!

இளமுல்லை போன்ற வீராங்கனைகள் உள்ளத்திலும், நீ புகுந்து, உணர்ச்சிப் பிழம்பைத் தட்டி எழுப்புகிறாய்.