இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வேக்காடு பிடித்த வானம் - உயர்ந்த காற்றால், நெளிந்து கொண்டிருந்தது!
வெப்பத்தின் விளைவு - தேங்கி நிற்கும் குட்டையை ஓங்கி அலையடிக்கும் ஆழியை - சுண்டவைக்கிறது!
விளைவு, எழினிகள் அங்கங்கே வானத்தில் கொத்துக் கொத்தாய்த் தொங்க ஆரம்பித்தன!
கரிய மேகங்கள் - வெண் மேகங்களோடு மோதின!
இடையிலே மின்னற் கீற்றுகள் சவுக்கால் அடிக்கப்பட்ட குதிரைகளைப் போல, மேகங்கள் திக்குக்கொன்றாய் ஓடின.
அந்த அடிகளைத் தாங்க முடியாத மேகங்கள் அழ ஆரம்பித்தன. அதுதான் மழை!
வானம் - தேம்பித் தேம்பி அழுதது! அதனை ஊமை மின்னல் என்று கூறுவார்கள் !
அதோ மின்னல்! அதன் தோற்றம், காதலின் முதல் பார்வையிலே வெளி வந்த ஒளி போல இல்லையா?
உடனே இருள்! அது கூம்பிய காதலின் வடிவமல்லவா?
பிறகு மழை, உடைந்த காதலின் உப்பு நீர் தானே அது?