பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/167

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மு. அறிவானந்தம்

159


அதன்பின் குறும் கலைக் களஞ்சியம் ஒன்றைத் தானே தயாரித்தால் என்ன என்ற எண்ணம் அவ்வப்போது மணவையார் உள்ளத்தில் உருவாகி அழுத்தமடைந்து வந்தது. அதற்கேற்ற இனிய சூழ்நிலை விரைவிலேயே ஏற்பட்டது. அதைப்பற்றி மணவையார் அவர்களே கூறுகிறார்:

'குழந்தைக் கலைக் களஞ்சியத்தை 'அ' முதல் 'ன' வரை படித்தறிய ஒரு சிறுவர் விரும்பினால் அச்சிறுவர் பத்துத் தொகுதிகளையும் புரட்டிப் பார்க்க வேண்டியதாகிறது. சுருங்கிய வடிவில் கையடக்கமாக ஒரே தொகுதியாக இருப்பின், அஃது படிக்கும் இளம் மாணவர்கட்கும் ஆசிரியர்கட்கும் மிகு பயன் விளைவிக்கும் என்ற கருத்தை என்னிடம் ஒரு சமயம் தமிழ் நாடு அரசின் கல்வியமைச்சர் மாண்புமிகு பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் வெளிப்படுத்தினார்கள். எனக்கும் அத்தகைய எண்ணம் முன்னரே மனதுக்குள் அழுத்தம் கொண்டிருந்ததால் அவர் கூறியதை நிறைவேற்ற உடன் செயல்படத் தொடங்கினேன். பள்ளி மாணவர்கட்கும், இடையிலே கல்வியைத் தொடராது நிறுத்திவிட்ட இளைஞர்கட்கும் பயன்படும் வகையிலும் படிக்க எளிதாக இருக்கும் முறையிலும் எளிய, இனிய எழுத்து நடையில், ஆழிய கருத்துநுட்பப் பொருள்களை எளிய சொற்றொடர் மூலம் விளக்கும் வகையிலும் படங்களோடு உருவாக்கினேன். இதன் மூலம் தமிழில் 'குறும் கலைக் களஞ்சியம்' இல்லையே என்ற மனக்குறை முற்றாக நீக்கப்பட்டுவிட்டது.

முந்தைய 'குழந்தைக் கலைக் களஞ்சியம்' பத்து தொகுதிகளிலும் 25 ஆண்டுகட்கு முன் தயாரிக்கப்பட்டவை. அவைகளில் இடம் பெறாத அண்மைக் கால அறிவியல், சமூகச் செய்திகள் பலவும் இக்குறும் சிறுவர் கலைக் களஞ்சியத்துள் இடம் பெற்றுள்ளன என்பது இங்கு கவனிக்கத்