பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/185

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமுதன்

177


னார் "இளமையில் வறுமை" அல்லது "இளமைப் போராட்டம்” என்று தலைப்பு அமையலாம் என மணவை முஸ்தபா உடன் பதில் கூறினார். இரண்டு தலைப்புகளுமே அவர்கட்கு உடன்பாடாயினும் இரண்டாவது கூறிய தலைப்பே அவர்கட்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. அந்த நூலுக்குத் தலைப்பு வைப்பதில் அதுவரை அவர்கட்குள் தடுமாற்றம் இருந்து வந்தது என்பதும், மணவை முஸ்தபா தந்த "இளமைப் போராட்டம்" என்ற தலைப்பே அந்த நூலுக்குத் தரப்பட்டது என்பதும் பின்னர் மணவையாருக்குக் கிடைத்த தகவலாகும். இவ்வாறு அவரது மொழி பெயர்ப்புத் திறனே இவரை உரிய முறையில் இனங்காட்டவும் பணியில் சேரவும் உதவியது என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் பணியில் சேர்ந்த பிறகுதான் தென் மொழிகள் புத்தக டிரஸ்ட் அமைப்பின் முழுப்பணியும் மொழிபெயர்ப்பையே மையமாகத் கொண்டது என்பது மணவையாருக்குப் புலனாகியது. அவரைப் பொருத்தவரை அஃது சர்க்கரை பந்தலில் தேன்மாரி பொழிந்தாற் போன்ற நிகழ்வாகும்.

இவர் தென் மொழிகள் புத்தக நிறுவனப் பதிப்பாசிரியர் பணியில் சேர்ந்தவுடனேயே இவரிடம் நான்கு மொழி பெயர்ப்பு நூல்கள் மூன்று மாதங்களுக்குள் அச்சிட்டாக வேண்டும் என்ற கண்டிப்புடன் கொடுக்கப்பட்டிருந்தது. அவை முன்னரே மற்றவர்களால் மொழி பெயர்க்கப்பட்டிருப்பினும் அவைகளை உரிய முறையில் ஆங்கில மூலத்தோடு ஒப்பிட்டாய்ந்து செப்பனிட்டு அச்சிட வேண்டிய கடப்பாடு இவருக்கு இருந்தது. அந்நான்கு நூல்களில் ஒரு

நூல் கோயிற்கலையும் சிற்பங்களும்(Temple Art and Architecture) என்பதாகும். பி.ஆர். சீனிவாசன் என்பவர் எழுதியது. ஒரு முஸ்லிம் இந்து சமயச் சார்புடைய நூலைச் செப்ப-

12