பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/30

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

16

அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்


 பார்ப்பவர்க்கு இவ்வுண்மை தெளிவாகும். நாளைய பொழிவில் இதனை விளக்கவேன்.

இல்லத்தினுள் காற்றில் மிதந்துகொண்டு இருக்கின்ற தூசிகள் போன்றவை பூமி, சந்திரன், சூரியன் முதலிய கோளங்கள். தூசிகள் தமக்கு அற்பமானவையாய்த் தோன்றுவன போன்று இறைவனுக்கு அண்ட கோளங்கள் அற்பமானவைகளாகும். இறைவனைப்பற்றிய பேருணர்வு நமக்கு வரும்போது நமது உடலைப்பற்றியோ, நிலவுலகைப்பற்றியோ கவலையொன்றும் நமக்கு உண்டாகாது.

இறைவனது சொரூபத்தின் பாங்குகளையும் குறிப்பிடுகின்றார், மணிவாசகப் பெருமான்.

"வேதியன் தொகையொடு மாலவன் மிகுதியும்
தோற்றமும் சிறப்பும் ஈற்றொடு புணரிய
மாப்பேர் ஊழியும் நீக்கமும் நிலையும்"

[1]

(வேதியன் தொகை - நான்முகர்களின் கூட்டம், மாலவன் மிகுதி - விட்டுணுவின் சேஷம்; தோற்றம் - படைப்பு: சிறப்பு - காப்பு: ஈறு - அழித்தல்; மாப்பேர் - மகாப்பிரளயம்)

எண்ணிறந்த நான்முகர்களும் அவர்கட்கெல்லாம் சேஷமாய் இருக்கும் திருமாலும், படைப்பு காப்பு அழிவு ஆகிய முத்தொழில்களும் மகாப்பிரளயமும் அதன் இருப்பும் முடிவும் ஆகிய இவை யாவும் இறைவனுடைய பாங்குகளாகும்.

சீவர்களுள் தலையாயவன் படைத்தற்கடவுளாகிய நான்முகன். ஒரு நான்முகன் கிரமமுக்தியடையும் பொழுது மகாப்பிரளயம் வருகின்றது. இங்ஙனம் நான்முகக் கடவுளர்கள் கணக்கற்ற பேர் தோன்றவும் ஒடுங்கவும் செய்கின்றனர். நான்முகர்கட்கு ஆதிமூலமாய் இருப்பவர், திருமால். ஆதலால், அவர் சேஷன் அல்லது எஞ்சியிருப்பவர் எனப்படுகின்றார்.தோன்றாதும் மறையாதும் இருப்பதால் சொரூபத்தில் சங்கரனும் நாராயணனும் ஒன்றேயாகும். மகாப்பிரளயம் உண்டாதலும் அது நீங்குதலும் எல்லாம் ஈசனுடைய "அலகிலா விளையாட்டுகளாம்."


  1. 19. திருவாச திருவண்டப்பகுதி, அடி 7-9.