பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் இலக்கியம்

35


“மன்னு குடிக்குறவர் வானூர் துலாத்திடையே
மின்னு மணிநிறுக்கும் வேங்கடமே.”48[1]

(மன்னு - நிலைபெற்ற; வான் ஊர் - வானத்தில் செல்லுகின்ற; துலா - துலா இராசி; மின்னும் - பிரகாசிக்கும்; மணி - இரத்தினம்) என்பது அய்யங்கரின் அற்புத அமுதவாக்கு. துலாத்து - அத்து - சாரியை. துலா இராசி ஐப்பசி மாதத்திற்கு உரியது.

தனுசு : தினைப்புனத்தைக் காக்கின்ற குறவர்கள் குளிர் மதியில் களங்கத் தோற்றமாய் இயங்கும் மான் வடிவைக் கண்டு, அதனைத் தினைப்புனத்தை மேய வரும் மான் என்று கருதி வானத்தில் வில் வடிவமாய்க் காணப்பெறும் தனுசு இராசியைக் கைவில்லாய்க்கொண்டு அம்பு எய்ய முயலுகின்றனர்.

“கொல்லைக் குறவர் குளிர்மதிமா னைக்ககன
வில்லைக் குனித்தெறியும் வேங்கடமே.”49[2]

(கொல்லை - தினைக்கொல்லை; மதி - சந்திரன்; ககன வில் - வானவில்; குனித்து - வளைத்து)

சந்திரனிடத்து உள்ள களங்கத்தை மான் என்று கூறுவார் கொள்கை ஈண்டுக் கொள்ளப்பெற்றது. தநுர் இராசி மார்கழி மாதத்திற்கு உரியது.

மகரம் : ஓங்கி வளர்ந்திருக்கும் மூங்கிலுக்கு நேராய்ச் சுறா வடிவம் போன்ற மகர இராசி வருங்கால், அது மதனவேளின் சுறவக் கொடிபோல் காட்சியளிக்கின்றது. இதனைக் கவிஞர்,

“தேனேறித் தேன்வைக்கும் திண்கழைமோல் விண்மகரம்
மீனேறி வேள்கொடியாம் வேங்கடமே.”50
[3]

(தேன் - வண்டுகள்; ஏறி - உயரப் பறந்து சென்று சேர்ந்து; திண் கழை - வலிய மூங்கில்; விண்மகரம் - மகர - இராசி; வேள் -மன்மதன்)

மதனவேள் சுறா வடிவத்தைக்கொண்ட கொடியையுடையவன். அவனுக்கு வடமொழியில் ‘மகரத்துவஜன்’ என்றும் தென்மொழியில் ‘சுறவக் கொடியோன்’ என்றும் பெயர்கள் உண்டு. மகர - இராசி தை மாதத்திற்கு உரியது.

கும்பம் : ஓங்கி வளர்ந்திருக்கும் மரக்கொம்பொன்றில் உள்ள தேனிறால் விண்ணில் செல்லும் பிறைச்சந்திரனது


  1. 48. திருவேங்கடமாலை - 20
  2. 49. திருவேங்கடமாலை - 21
  3. 50. திருவேங்கடமாலை - 22