பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/61

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் இலக்கியம்

47


கோவைக் குழவிகள் (Quintuplets), எண் கோவைக் குழவிகள் (Octuplets) ஆகியவை பற்றியும் தெளிவாய் விளக்குதல் வேண்டும்.

கண்ணுக்குத் தெரியாத நுண்ணிய உயிரணுக்களிலிருந்து மானிட உயிர் தோன்றுவதும், பல்வேறு சிக்கலான அமைப்புகளையும் பண்புகளையும் கொண்ட ஒரு மனிதன் உருப்பெறுவதும் வியப்பினும் வியப்பேயாகும். அந்தச் சிறிய உயிரணுக்களிலிருந்தே இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து என்று சில சமயம் ஒரே மாதிரியான பல குழவிகள் தோன்றுவதைக் காணும்பொழுது நம்முடைய வியப்பு பன்மடங்கு அதிகரிக்கின்றது. இயற்கையின் இரகசியம் புரிந்துகொள்ள முடியாத புதிராய் இருப்பதைக் கண்டு இறும்பூது அடைகின்றோம். ஈண்டு இங்ஙணம் பல விதக் குழவிகள் பிறப்பதை விளக்குவேன்.

இரட்டைக் குழவிகள் : இரட்டைப் பிறவிகள் இருவகையில் உண்டாகலாம். கருவுற்ற ஒரே முட்டையிலிருந்து இரண்டு குழந்தைகள் உண்டாகின்றன. கருவுற்ற முட்டை பிரிவுபட்டு உண்டான கருப்பத்தில் உள்ள உயிரணுக்களின் தொகுதி இரண்டு பகுதிகளாகப் பிரிந்து ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு குழந்தையாக வளரும். வளர்ச்சியின் முதல் நிலையில் எல்லா உயிரணுக்களுக்கும் குழந்தையின் எல்லாப் பகுதிகளாய் வளரும் ஆற்றல் உண்டு. இவ்வாறு பிறக்கும் குழவிகளின் தோற்றம், தன்மை, உயரம், நிறம், உறுப்புகளின் அமைப்பு முதலிய மரபு வழிக் கூறுகள் அனைத்திலும் ஒரே மாதிரியாகவே இருக்கும்; இரண்டும் ஆணாய் இருக்கும்; அல்லது பெண்ணாய் இருக்கும். அஃதாவது, இவ்வகைக் குழவிகளில் பால் வேற்றுமை இராது. ஒவ்வொரு குழவிக்கும் தனித்தனிப் பணிக்குடமும், தனித்தனிக் கொப்பூழ்க்கொடியும் இருக்கும். கொப்பூழ்க்கொடிகள் இரண்டும் ஒரே நஞ்சுடன் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய இரட்டைப் பிறவிகளை ஒருகரு இரட்டையர் (Identical twins) என்றும், அச்சு இரட்டையர் என்றும் வழங்குவர். நம் காலத்தில் வாழ்ந்த ஆர்க்காட்டுச் சகோதரர்களை இவ்வகைக்கு எடுத்துக் காட்டாய்க் கொள்ளலாம்.