பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்



4. வானியியல்

வானியல் (Meteorology) பற்றிய ஒருசில கருத்துகளையும் இலக்கியங்களில் காண்கின்றோம். மேலே செல்லச் செல்லக் காற்று இலேசாய் இருக்கும் என்பது விண்வெளி ஆராய்ச்சியால் பெறப்படும் உண்மையாகும். கடல்மட்ட அளவில் பத்து மைல் உயரத்தில் காற்று பத்தில் ஒரு பங்காகிவிடுகின்றது என்றும், இருபது மைல் உயரத்தில் அது கிட்டத்தட்ட நூறில் ஒரு பங்காய்க் குறைந்துவிடுகின்றது என்றும், முப்பது மைல் உயரத்தில் அஃது ஆயிரத்தில் ஒரு பங்காகிவிடுகின்றது என்றும் இந்த ஆராய்ச்சியால் அறிகின்றோம். இத்தகைய ஓர் உண்மையைக் கம்பநாடன் மிகச் சமத்காரமாய்க் கூறுவன். இலங்கையிலுள்ள மாளிகைகள் தேவர் உலகை எட்டும்படியாய் உள்ளன. மேருவையும் வருத்தக்கூடிய பேராற்றல் வாய்ந்த காற்று அந்த உயரத்தில் தென்றலாய் வீசுகின்றதாம்.

“நாகா லயங்களொடு
        நாகர்உல கும்தம்
பாகார் மருங்குதுயில்
        என்னஉயர் பண்ப;
ஆகாயம் அஞ்சஅகன்
        மேருவை அணுக்கும்
மாகால் வழங்குசிறு
        தென்றல்வர கின்ற.”65[1]

(அணுக்குதல் - வருத்துதல்; மாகால் - பெருமையுடைய காற்று; வழங்கு - இனிதாய் அளிக்கப்பெறுகின்ற)

என்பது கம்பன் வாக்கு. மிக்க வலிமையையுடைய காற்றுக் கடவுளும் இராவணனிடத்து அச்சத்தால் அடங்கித் தென்றலாய் இனிது வீசப்பெற்றிருந்தனன் என்று கவி சமத்காரமாய்க் கூறுவதை அறியலாம். அறிவியல் கருத்து ஈண்டு நயமாய்க் கூறப்பெற்றுள்ளது.


  1. 65. கம்பரா. சுந்தர. ஊர்தேடு - 2