பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/69

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் இலக்கியம்

55



"ஆனை ஆயிரம் தேர்பதி னாயிரம்
அடல்பரி ஒருகோடி,
சேனை காவலர் ஆயிரம் பேர்படின்,
கவந்தம் ஒன்று எழுந்தாடும்:
கானம் ஆயிரம் கவந்தம்நின்று ஆடிடின்
கவின்மணி கணில்என்னும்
ஏனை அம்மணி ஏழரை நாழிகை
ஆடியது இனிதன்றே.”72

என்று கூறுவான். ஆயிரம் யானைகள், பதினாயிரம் தேர்கள், ஒருகோடி குதிரைகள், ஆயிரம் சேனைக்காவலர்கள் இறந்துபட்டால் தலையில்லாத பேய் (கவந்தம்) ஒன்று எழுந்து ஆடுமாம். ஆயிரம் கவந்தங்கள் ஆடினால் இராமனது கோதண்டத்தில் கட்டப்பெற்றுள்ள அழகிய மணி ஒருமுறை "கணில்" என ஒலிக்குமாம். ஆனால், இராமனது மூல பல வதைப் போரில் அம்மணி தொடர்ந்து, தீயணைக்கும் படையினர் செல்லும் மோட்டார் வண்டியில் ஒலிக்கும் மணிபோல், ஏழரை நாழிகை ஒலித்ததாம். கவிஞன் கூறும் இந்த உண்மையைக் கொண்டு அழிந்துபட்ட மூல பலச் சேனையின் அளவினை ஒரளவு நம் மனத்திரையில் அமைத்துக்கொள்ள முடிகின்றது. மூலபலத்தின் அளவை நாம் நன்கு உணர்ந்துகொள்கின்றோம். கணித உண்மையைவிடக் கவிஞன் கூறும் உண்மை இதற்கு நன்கு பயன்படுகின்றது. இதிலிருந்து, கவிதை உண்மையின் தன்மையை ஒருவாறு நாம் புரிந்துகொள்ளலாம்.

மெய்ம்மைகளை (Facts) அப்படியே இருந்தவாறே கூறுவது கவிதை உண்மையன்று; அவற்றைத் திரித்துக் கூறுவதும் அ.தன்று; திரித்துக் கூறுவது பொய்ம்மை; புனைந்துரை. மெய்ம்மைகளை அப்படியே கூறுவது, அறிவியல். இங்ங்னம் பல்வேறு உண்மைகளை, மெய்ம்மைகளை, உணர்ச்சியுடன் உணரச்செய்வது கவிதை உண்மையாகும். அது நம் உள்ளத்தில் இன்ப உணர்ச்சிகளையோ துன்ப உணர்ச்சிகளையோ, நம்பிக்கையையோ அச்சத்தையோ, வியப்பினையோ சமய ஈடுபாட்டையோ எழுப்ப வல்லது. எனவே, கவிதை உண்மை என்பது, பொருள்களை இருந்தபடியே எடுத்துரைப்பதன்று.


72. கம்பரா.யுத்த மூலபலம் - 228. வில்லி பாரதத்திலும் இதே மாதிரி ஒரு கணக்கு உள்ளது.


72. கம்பரா.யுத்த மூலபலம் - 228. வில்லி பாரதத்திலும் இதே மாதிரி ஒரு

கணக்கு உள்ளது.