பக்கம்:அலிபாபா.pdf/5

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



இந்தக் கதை


அலுப்போ சலிப்போ இல்லாமல் படிக்கவும், மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லவும் ஏற்றது அலிபாபாவின் கதை. கதையை ஒருமுறை படித்தவுடன், நமக்கு அந்த விறகுவெட்டியிடம் அன்பு ஏற்பட்டு விடுகின்றது; அவனுடைய எதிரிகள் நம் எதிரிகளாக ஆகிவிடுகின்றனர். அவனை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றும் மார்கியானா என்னும் வேலைக்காரி உண்மையிலேயே உலகில் ஒரு பெண்ணாக உயிருடன் இருந்தால், அவளைப் போய்ப் பார்க்க வேண்டும் என்று ஆவலுண்டாகின்றது.

இந்தக் கதை ‘அராபியர் நிசிக்கதைகள்’ அல்லது ‘ஆயிரத்தோர் இரவுகள்’ என்று சொல்லப்பெறும் கதைகளோடு பிற்சேர்க்கையாகச் சேர்க்கப்பெற்றுள்ள கதைகளுள் ஒன்று. இது தமிழிலும் ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் திரைப்படமாக்கப்பட்டுள்ளது.

இளைஞர்களுக்கு இன்பமூட்டக்கூடிய ‘சிந்துபாதின் கடல் யாத்திரைகள்’, ‘அலாவுத்தினும் அற்புத விளக்கும்’, ‘இரண்டு நண்பர்கள்’, ‘அலிபாபா’ ஆகிய அரபுக்கதைகளை தமிழில் தனித்தனியாக வெளியிட்டிருக்கிறோம். தமிழகத்தில் இவைகளுக்கு நல்ல வரவேற்பு இருக்குமென்று நம்புகிறோம்.


பழனியப்பா பிரதர்ஸ்



"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலிபாபா.pdf/5&oldid=508928" இலிருந்து மீள்விக்கப்பட்டது