136 O லா. ச. ராமாமிருதம்
அம்மா சொன்னது போல், குடும்பத்தை வாயையும் வயிற்றையும் இழுத்துக்கட்டி நடத்தியது போக, மாமாவின் இன்ஷுரன்ஸ், சம்பளப் பிடிப்பில் மிச்சத்துடன் தன் காது, மூக்கு. கழுத்தில் இருந்ததையும் கழற்றி அதுவரை பெட்டியில் வைத்திருந்ததைப் பெண்ணுக்குப் பூட்டி, கையில் இருந்த பண்டம் பாத்திரங்களைப் புதிசு பண்ணி இட்டு நிரப்பினாள், மாமி, போதும் போதாதற்கும், சரீர உபகாரத்திற்கும் நான், நீ' என்று ரங்கசாமி வாத்தியாரின் பழைய மாணவர்கள் முந்திக் கொண்டனர்.
எல்லாம் இருப்பவர்களுக்குக் குறைவில்லாமல், கலியாணம் செவ்வையாகத்தான் நடந்தது.
பொலபொலவெனப் புலரும் தருணம்
கொட்டு மேளம் கொட்டி முழங்குகையில்
பந்தலுள் வாசலையடைந்த பெண்கள் கூட்டத்தில்
புதுப் புடைவைகளின்
புசுபுசுவிலிருந்து
ஒரு ஒளி பிரிந்து
படியெதிரில் நின்ற பரதேசி கைபிடித்து
ஓரங்கள் முள் கூராய்
இழுத்து மை தீட்டிய
இரு விழிகள்
ஒரு தரம், ஒரே தரம்
கைப்பிடித்தவனை மலர விழித்து
உடனே தாழ்ந்து
அ பி தா வாய்
அமைந்ததும் எனக்கு அடிவயிறு ‘திக்' கென்றது.
அது அபிதா தானே? தரிசனமா?
எனக்கே தெரிந்தது. இது எனக்கு எட்டாத கனவு.
இப்போ புரிந்தது. என் தகப்பனார் மஹா விவேகி.