அலைகள் O 241
படுத்தபடி, அரைக்கண்ணில் என்னைப் பார்த்து நீ புன்னகை பூக்கையில், “உன் கண்ணெதிரில் நான் இருக்கையிலேயே தேடுமிடம் தெரியாமல் தேடிக்கொண்டிருந்த முட்டாளே, இதோ தான் போய்விடப் போகிறேன் இனி என்ன செய்யப் போகிறாய்?" என உன் உதட்டோரக் குழிவில் தேங்கிய மெளன ஏளனம், என் மேல் அர்த்தம் விடிகின்றது.
அவள் அல்ல நீ, நீ அல்ல அவள்-அவள் நீ, நீ அவள்
அவளா நீயா? அவளே நீ
என என்னைச் சுற்றிச் சுற்றி அவளும் நீயும் மின்னலிடுகையில் என்னால் அடக்க முடியவில்லை. “சிக்காமு சிக்காமு கண் அவிந்து போனேனே!’ என் கதறல் கேட்டு எல்லோ ரும் சற்று வியப்புடனேயே என்னை நோக்குகிறார்கள்.
‘கிழவர் இத்தனை நாள் வயிற்றுக்குள் இவ்வளவா அடக்கி வெச்சிண்டிருந்தார்! என்னமோன்னு நினைச்சோமே!” என்று ஒரு பேச்சு காதில் விழுகிறது. இன்னொரு குரல்;
"நன்னாயிருக்கு உன் அதிசயிப்பு! கிழவரானாலும் மனுஷன்தானே! இனி அவர் கூப்பிட்ட குரலுக்கு ஏன் என்க. யாரிருக்கா? பிள்ளைகள் நல்லவா. நாட்டுப் பெண்கள் தங்கக் கம்பின்னே வெச்சுப்போம். ஒரு தலையை வலிச்சால் பிள்ளைகள் டாக்டரை வரவழைப்பா, நாட்டுப் பெண்கள் கஞ்சி வெச்சு, வேணும்னா படுக்கையைத் தட்டிப் போடுவா. ஆனால் “ஐயோ!’ ன்னு பதர்றவா யார்? தொப்புள் சுழியிலிருந்து கிளம்பற அந்த “ஐயோ’வின் அதிகாரம்தான் உயிர் வளப்பாண்டி! பாக்கி உன் உபசாரம், மரியாதை, கடமையெல்லாம் வெறும் நாள் வளப்பான்கள்!"
அலைகள் திரள்கின்றன. உருண்டு ஓங்கிக் கொந்தளித்துக் கக்குகின்றன. அத்தனையும் கரை மீது அறைந்து பரவி நீர்த்து வடிகின்றன. திரும்பத் திரும்ப இதேதான். இருப்பதைக் காணாததும், இல்லாததைத் தேடுவதும், இருப்பதைக்