பக்கம்:அவள்.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

219 லா. ச. ராமாமிருதம்


என் தாய் ஆணாய்ப் பிறக்க வேண்டியவள். ஏதோ சிருஷ்டிப் பிசகில் பெண்ணாய்ப் பிறந்துவிட்டாள் என்று தானே எண்ணுவதுண்டு. நெஞ்சில் உரம் பாய்ந்தவள். நம்பிக்கைகளை அவள் துறந்தாள் என்பதைவிட, அவை அவளுடன் ஒட்ட இயலாது விட்டன என்பதே பொருந்தும்.

"அம்பி, இந்த ஊர் நாக்கு பிளந்த நாக்கு. என்ன தான் பேசாது? நீ வயத்திலிருக்கும்போதே உன் அப்பாவைக் காவேரி காலை வாரிவிட்டதுக்கு, நீ கொஞ்ச நாள் பின் தள்ளிப் பிறந்திருந்தால் என் நாணயமே நாறிப் போயிருக்கும். முன் தள்ளிக் குறை மாதத்தில் பூமியில் விழுந்திருந்தால் உன் உயிருக்கே தீம்பு அப்பவும் ஏச்சுத்தான். பாவி, ஒண்ணே ஒண்ணு, "தான்தான் போகப் போறோம்னு நட்டுவிட்டுப்போன பயிரையும் அழிச்சுட்டு நிக்கறா!" எதை நம்பி இங்கு வாழ?உண்மையில் அம்பி, யாரால் யாருக்கு என்ன பிரயோஜனம்? உன் வழி உனக்கு, என் விதி வழி நான். இந்தப் போலி வாழ்க்கை எனக்கு இத்துடன் போதும். தான் செத்த பின்னும் எனக்காகச் சடங்குகள் மூலம் இது என்னைக் தொடர வேண்டாம். என் பிறப்புத்தான் என் வசத்திலில்லை. வாழ்க்கையோ பிறருடையதாப் போயிடுத்து. என் சாவாவது என்னுடையதாயிருக்கட்டும். நீ யிறைக்கும் எள்ளுக்கும், தண்ணீருக்கும் நான் கரையோரம் வந்து, வாயைத் திறந்துண்டு காத்திருப்பேன் என்று எண்ணாதே எனக்கு சுயக் கெளரவம் உண்டு.”

ஏன் இப்படித் தன்னை முறுக்கேற்றிக் கொள்கிறாள் என்று நான் திகைப்பதுண்டு. ஆனால் அவள் சொல்வதில் எங்கோ உண்மை புதைந்திருக்கிறது. "எங்கே என்னைக் கண்டு பிடி" என்று எள்ளி நகையாடுகிறது.

ஆனால் என்றேனும் ஒருநாள் உண்மையை முகமுழித்துத்தான் ஆக வேண்டும், தப்ப முடியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/254&oldid=1497289" இலிருந்து மீள்விக்கப்பட்டது