பக்கம்:அவள்.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

260லா. ச. ராமாமிருதம்



குழந்தைகூட குளிக்கலாம், குற்றால நீர்வீழ்ச்சி, மேலே பாலருவி, தேனருவி, கடைசியாக கன்யாகுமரியில் முக்கூடல் கடல்.

உட்கார்ந்த இடத்திலேயே இத்தனை அனுபவமும், நினைப்பு மீண்டபோது கீழ்த்திசையில் விடிவு பொல பொல. கண்டது. அத்தனையும் கனவா? தோன்றவில்லை, நனவா? சாத்யமில்லை. இடையில் என்ன அது? உடம்பில் துளி அசதியில்லை. உற்சாகமே தெரிந்தது.

பாஸ்கர் பூசை புனஸ்காரத்தில் மும்முரமாகி விட்டார்.

அவரால் அவளை ஆபீஸ் நேரத்துக்குக்கூட பிரிந்திருக்க முடியவில்லை இதுமாதிரியும் உண்டா? எனக்கு ஏன் இப்படி? என்று தன்னைத்தானே கேட்டுக்கொள்ளக் கூடத் தோன்றவில்லை. பூஜையில் கண்ணை மூடி அமர்ந்ததும் அவருடைய இதயக்கமலத்தில் வீற்றிருந்தபடி, பின்னணியில் எழும் உதயஜோதியில் அவள் ஜ்வலித்தாள். பாஸ்கர் தன் மனோபக்குவ நிலையில் ஒரு தடம் தாண்டி விட்டாரா?

உடனே அவர் உச்சிக்குடுமி வைத்துக்கொண்டு, பஞ்சக்கச்சம் கட்டிக்கொள்ளத் தேடவில்லை. ஒருவேளை அப்படிச் செய்திருந்தால், அவருடைய உடல்வாகுக்கு மேனி சிவப்புக்கு நன்றாகவே இருந்திருக்கும்.

இங்கே பக்கத்தில் எங்கே நந்தவனம்? தேடி விசாரித்து, தானே மலர்களை குடலை பொங்க பறித்து, தொடுத்து, சார்த்தி, அழகு பார்த்து மகிழ்வார். அபிஷேகத் திரவியங்களைச் சேகரித்து, அன்பு பொங்கக் குளிப்பாட்டுவார். உயர்ந்த பட்டுத் துணியில், பக்தியுடன் ஒற்றி, துடைத்து, உடுத்தி, மலர் அணிவித்து, தூப தீபம் காட்டி, நேரம் போவதே தெரியவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/304&oldid=1497848" இலிருந்து மீள்விக்கப்பட்டது