பக்கம்:அவள்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



xxxii

 

"இதோ நம் வீட்டில் காய்த்தது" என்று என் மனைவி, தன் இரு கைகளின் அள்ளலில் பச்சைப் பசேலென்று அவரைக்காய்களைக் கொட்டுகிறாள். என் கையில் எடுத்து மார்புடன் அணைத்துக் கொள்கிறேன். என் விழிகள் நிறைகின்றன. இதுவும் எனக்குப் பக்தியில் சேர்ந்ததுதான். அவளுடைய சிருஷ்டியின் செருக்கு, அவளுடைய முன்றானைக் கொடுக்கு, என்மேல் படுகிறது.

ஏதோ ஒரு வாக்கியத்திலோ; சொற்றொடரிலோ பதத்திலோ, அல்லது இரு பதங்களினிடையே தொக்கி நின்ற அணுநேர மெளனத்திலோ ஒரு பெருமூச்சிலோ, படித்தபின் விழியில் நடுங்கும் கண்ணிரின் பளபளப்பிலோ, அவள்தான் அப்படித் தோன்றித் தெரிகிறாள். உள்ள நெகிழ்ச்சியின் சொசு சொசுப்பில் நடந்து வருகிறாள். ஜல் ஜல் சதங்கையொலி.

இந்த சிந்தனையின் தொடர்பில் ஒன்று கேட்கிறேன். முற்றும் துறந்த துறவி சங்கரன் ஏன் பெண்ணைப் பூஜிக்கிறான்? இந்த உலகமே, நீ காணும் வாழ்க்கையே மாயம் என்று தூக்கி எறிந்தவனாயிற்றே?

"நீ காமாசுகி, நீ சாரதா, நீ சக்தி, நீ பெண்.”

***

"என்னடா பண்ணறிங்க? என்னை அடிக்காதீங்கடா, கிள்ளாதீங்கடா பாப்பா நான் பாவண்டா!"

அந்தப் பெரிய பேச்சு, குழந்தை வாயில் கேட்கையில், அதில் செறியும் அந்தப் பாசாங்கு, கொஞ்சல், அற்புதமான இனிமை-ஸ்தம்பித்துப் போகிறேன். அவளை ஒட்டுக் கேட்கையில் இதுவரை கிடைக்காத இன்பம் எய்துகிறேன்.

'ஹல்லோ! யார் பேசறது? ஜான் பேசறதா (ஹோசூரில், எதிர்வீட்டு ஜான் இவளைவிட ஒரு வயது சிறியவன்-பத்துமாதப் பாப்பா டெலிபோன் பேசுகிறாள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/32&oldid=1496108" இலிருந்து மீள்விக்கப்பட்டது