பக்கம்:அவள்.pdf/546

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

502 லா. ச. ராமாமிருதம்



அம்மா ஒரு மரச்சீப்பில் கரும்பச்சையாய் ஒரு உருண்டையை ஏந்திக்கொண்டு என்னிடம் வந்தார்.

'குட்டீ, சாப்பிட்டுட்டையா?"

"ஆச்சு அம்மா...'

'தின்ன வேண்டியதெல்லாம் தின்னாச்சா?”

"ஆச்சு- (அந்தக் கோதுமை அல்வாவில் ஒரு துண்டு வாங்கிட்டால் தேவலை. நான் தான் தண்டு போட்டேன். ஆனால் கேக்கறதுக்கு வெக்கமாயிருக்கே!)

"அப்படியானால் உக்காந்துக்கோ, மருதாணியிடறேன்.'

அம்மா என் பாதங்களைத் தொட்டதும் எனக்கு உடல் பதறிப்போச்சு. என்னம்மா பண்றேள்? அம்மா கையிலிடப் போறாராக்கும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் என் பேச்சு அம்மாவுக்குக் காது கேட்கவில்லை. என் பாதங்களை எங்கோ நினைவாய் வருடிக் கொண்டிருந்தார். வேலை செய்தும் பூப்போன்று மெத்திட்ட கைகள்; எனக்கு இருப்பே கொள்ளவில்லை. அம்மா திடீரென்று என் பாதங்களைக் கெட்டியாப் பிடித்துக் கொண்டு அவைமேல் குனிந்தார். அவர் தோளும் உடலும் அலைச் சுழல்கள் போல் விதிர்ந்தன. உயர்ந்த வெண் பட்டுப்போல் அவர் கூந்தல் பளபளத்தது. என் பாதங்களின் மேல் இரு அனல் சொட்டுக்கள் உதிர்ந்து பொரிந்தன.

'அம்மா! அம்மா!' எனக்கு அழுகை வந்துவிட்டது. அதுவே ஒட்டுவாரொட்டி. எனக்கும் தாங்கிக்கிற மனசு இல்லை.

'ஒண்ணுமில்லேடி குட்டி பயப்படாதே'. அம்மா மூக்கை உறிஞ்சிக்கொண்டு கண்ணைத் துடைத்துக்கொண்டார். 'எனக்கு என்னவோ நினைப்பு வந்தது. எனக்கு ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/546&oldid=1497355" இலிருந்து மீள்விக்கப்பட்டது