பக்கம்:அவள்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20 லா. ச. ராமாமிருதம்

அம்மா புதிர் மாஸ்டர்.

ஆபிஸிலிருந்து திரும்பும் வேளைக்கு இன்று இரவாகிவிட்டது.

சட்டையைக் கழற்றி மாட்டுகையில் அவள் வந்து காதைக் கடித்தாள். "அம்மா இன்னி முழுக்க சாப்பிடல்லே. இலையில் உட்கார்ந்தவா, சாதத்தைத் தொடாமலே எழுந்து போயிட்டார்."

அம்மாவுக்கு உடம்புக் கோளாறு என்று தனியாகத் தெரியவில்லை. அம்மா இன்னும் படுத்த படுக்கையாகவில்லை. ஆனால் அவளுடைய வேளைகள் தடுமாற ஆரம்பித்திருக்கின்றன. அவள்மேல் மூட்டங்கள் அடிக்கடிக் கவிகின்றன. இது முடிவின் ஆரம்பம்! இம்மி இம்மியாக அவள் எங்களை விட்டு நழுவிக் கொண்டிருக்கிறாள் என்று உள்மனசு சொல்றது. என் செய்வது? வாழ்க்கையே இப்படித்தான், இதுதான் தெரிகிறது. ஆனால் என் செய்வேன்?

"வயதாகி விட்டதோன்னோ?”

இதுதான் மற்றவர் சமாதானம்.

ஆனால் இதுதான் சமாதானமா?

கட்டிலில் உட்கார்ந்திருந்தாள். என்னைக் கண்டதும் லேசான புன்னகையில்லை. நான் வந்ததே பதியவில்லை. சுவரைப் பார்த்துக்கொண்டு என்னவோ யோசனை.

பக்கத்தில் உட்கார்ந்தேன்!

"அம்மா, உடம்பு சரியில்லையா?”

"அட, எப்போ வந்தே? இல்லையே, சரியாத்தானேயிருக்கேன்!”.

"இல்லை ஏதோ யோசனையாயிருக்கே!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/64&oldid=1496246" இலிருந்து மீள்விக்கப்பட்டது