பக்கம்:அவள்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42 லா, ச. ராமாமிருதம்

குழந்தையை அப்படியே அள்ளிக்கொண்டேன். ஆனால் கால்கள் செயலிழந்துவிட்டன. அதன் தாக்கிய படம் அவளைப் பார்க்க, என்னைப் பார்க்க, நான் அதனைப் பார்க்க குழந்தை சிரிக்கிறது. அங்கே, அந்தத் தருணத்தில் எங்கள் பார்வையின் முக்கூடலில்,

- அந்தச் சிரிப்பில் உன்னைச் சந்தித்தேன்.

ஜ்வாலாமுகி

ஏதோ நாணின் ‘பூம்' என்னுள். பயம், 'த்ரில்’ விறுவிறு, ஆனந்தம் - இன்னும் விவரிக்க என்னிடம் வார்த்தையில்லை.

ஏதோ குளறிக்கொண்டே, யாரோ என் பின்னாலிருந்து ஓடிவந்து, குழந்தையைப் பிடுங்கிக் கொண்டு, என்னை வைதுகொண்டே, தான் வந்தவழி திரும்பிச் சென்றாள். ஆனால் என்னை நான் மறந்த நிலை முற்றிலும் கலையவில்லை. அந்தப் பரவசத்திலிருந்து தெளிந்து என்னைச் சுற்றுமுற்றும் பார்த்தபோது, இடம் 'வெறிச்'சென்று இருந்தது. சூரியன் மேலை வாயிலில், தகதகச் சிரிப்புடன் சாய்ந்து கொண்டிருந்தான். ஒருவிதமான ஆரஞ்ச் கலர் பசும்புல் தரையை, தொடுவானை எட்ட வயல்களை, என்னை ஏற்றிற்று. உன் சிரிப்பின் ஒளி. ஜ்வாலாமுகி.

வேண்டியும், தேடியும் கிடைப்பது தரிசனம் அன்று. எப்படியும் அது முழு தரிசனமாகாது. அடித்துக் கனியவைத்த பழம். தானாக நேர்வதுதான் தரிசனம். திரும்பத் திரும்ப நேர்வதும் தரிசனமாகாது. அது 'கிச்சுக் கிச்சு' தரிசனம் ஒருமுறை, ஒரே தடவைதான் உண்டு. அதில் தீய்ந்து கருகி எரிந்துபோன சதை, ப்ரக்ஞையின் ஒருதடம் - அதற்கு மறு வளர்ச்சி கிடையாது. அந்த ஜ்வாலையின் குபீர், அது நித்யத்வத்தின் பொறி. அந்தப் பொறி நேரம் நானும் ஜ்வாலாமுகி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/86&oldid=1496399" இலிருந்து மீள்விக்கப்பட்டது