பக்கம்:அவள் ஒரு எக்ஸ்ட்ரா.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

சினிமாவில் நடிப்பது மகிழ்வான, கலையான், கௌரவமான மதிப்பான வாலை என்று எண்ணி வந்த அவளுக்கு அதைப் போன்ற மோசமான அலுவல் வேறு ஏதாவது இருக்க முடியுமா என்ற எண்ணத்தை உண்டாக்கியது அனுபவம். அவள் ஒரு எக்ஸ்ட்ரா. எக்ஸ்ட்ரா நடிகை என்றதுமே கேவலமாகக் கருதுகிறார்கள் பலரும் தொழிலில் உள்ளவர்களில் பெரும்பாலோரே தான். அவள் பிழைப்பிற்காக பிறர் தயவை எப்படியாவது பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடி ஏற்பட்டது. எப்படியாவது என்று கருப்புசாமி சொன்னதன் பொருள் அவளுக்குப் புரிந்தது. தயவை பெறுவதற்கு அவள் தன்னை தன் உடலை காணிக்கையாக்க வேண்டியிருந்தது. பட உலகச் சில்லறைத் தேவதைகள், பூசாரிகள் முதல் முதலாளி ஐயாவின் கார் டிரைவர் வரை, அவள் ஒரு எக்ஸ்ட்ரா என்பதனால் அவளிடம் தங்களுக்கு தாராள உரிமை உண்டு என்று நம்பினார்கள். அப்படியே நடந்து கொள்ளத் தவித்தார்கள். கலையின் பெயரால் காமம் ஆட்சி செலுத்துவதை அவள் உணர்ந்தாள். கௌரவம், அந்தஸ்து, பணம், படாடோபம், செல்வாக்கு முதலிய போர்வைகளில் மிருகத்தனமும், சின்னத்தனங்களும், செழிப்புற்று வாழ்வதை அவள் உணர முடிந்தது. அந்தப் படு பயங்கரமான சுழலிலே அவள் சிக்கிக் கொண்டாள். அவளாகவே ஆசையோடு வந்து விழுந்தாள். இனி மீள வழியில்லை என்றேத் தோன்றியது.

முதல் படத்திற்குப் பிறகு 'சான்ஸ்' கிடைப்பது சுலபமாக இருக்கவில்லை. பழைய கதையேதான். அலைந்து அலைந்து திரும்புவது. சிபாரிசுச் சீட்டாக சிலரிடம் தன்னை ஒப்புவிக்க வேண்டியிருந்தது. கலையின் பெயரால் கௌரவமான விபசாரம் அல்லாமல் வேறு என்ன இது எனற நினைப்பு எழும், ஆனால் அவள் பிழைக்க வேண்டுமே! எத்தனையோ தினங்கள் அவள் பட்டினி கிடந்தாள். கருப்புசாமியும் ' அம்மா' என்று அழைத்த ஸ்தீரீயும் போதனைகள் பல புரிந்து அவளை 'தொழிற்காரி' யாக மாற்றி விட்டார்கள். உயிர் வாழ்வதற்காக அவள் உடலை விற்றாள். பணத் தேவையும் இருந்ததே! படக்