16
இடது கை விரல்களை மயில் மாதிரி ஒயிலாக அசைத்து, உதவியாளரின் இரவு வணக்கத்தை ஆமோதித்து ஏற்றுக் கொண்டவளாக, “89 பிப்ரவரி நாலில் நான் நடத்தப் போற காதல் சுயம்வரத்துக்கு, இன்றைக்கு எத்தனை ஆண் சிங்கங்கள் மனு பண்ணியிருக்காங்க?” என்று விசாரணை செய்தாள், அவள்.
கேள்வியில் அலட்சியமானதொரு விசித்திரப் போக்கு குரல் கொடுக்காமல் இல்லை. ஆனாலும், கவர்ச்சியான அவளது கண்களில் மட்டும் ஒரு சித்திரமான கற்பனை ஆசையுடனும் ஆதங்கத்துடனும் வலைப் பின்னிக் கிடக்கிறதே!
“இன்று பத்தோடு நின்னு போச்சுங்க, மேடம்” என்னும் விடையையும் அவள் கணப்பொழுதில் சீரணித்துக் கொள்ளவும் செய்தாள். “மிஸ்டர் ராவ், உங்கள் மனைவி உங்களுக்காகக் காத்திருப்பார்! நீங்கள் போகலாம்” என்று விடை கொடுத்தாள்.
ரேவதி நெற்றியைத் தடவிக் கொண்டாள். நெற்றிக் கண்ணைத் தேடியிருப்பாளோ! ‘தனிப் பார்வைக்கு’ என்பதாக ஒரு கடிதம் வந்திருந்ததே! நடந்தாள், பதட்டமும் கூடவே நடந்திருக்க வேண்டும்.
உறை தாறுமாறாகக் கிழிகிறது.
“அம்மா ரேவதி அவர்களே! உங்கள் க்ஷேமலாபம் எப்படி?
நீங்கள் நலம்தானே!
- உங்கள் மனமும் நலமாய் இருக்கிறதுதானே?