பக்கம்:அவள் ஒரு மோகனம்.pdf/35

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

21

செக்கச்சிவந்த பிறை நெஞ்சில் குங்குமம் பளிச்சென்று சிரித்தது; மேல் மருவத்தூரில் அன்னை ஆதிபராசக்தியை தரிசித்த போது கிடைத்த அருள் பிரசாதம்.

இளமை மதர்ப்பு மாறாத எழிலார்ந்த மார்பகத்தில் பச்சை மண்ணாகக் கள்ளங்கவடு இல்லாமல் தவழ்ந்து கிடந்த நாடிக்குழல் அந்த நேரத்திலே அவளது மனத்தின் நாடியைப் பரிசோதித்திருக்கலாமோ? இல்லை, அவளது மனச்சாட்சியை நாடி பிடித்து சோதித்துப் பார்த்திருக்குமோ, என்னவோ? காபியைப் பருகி முடித்ததும் கூட, இன்னமும் அவள் ‘சப்பு’க் கொட்டினாள்.

மறக்கத் தெரிந்த உள்ளத்திற்கு நினைக்கவும் ஏன்தான் தெரிகிறதோ?

பறந்து போய் புதுக்கோட்டையில் நின்ற ரேவதி, பறந்து வந்து மேற்கு தாம்பரத்தில் நின்றாள். சிலிர்ப்பு அடங்கவில்லை. மார்பகம் எம்பி எம்பித் தணிய, தன் நினைவு கொண்டாள். அவள் கண்கள் திறந்தன; திறந்த கண்களில் கொட்டு முழக்கில் மணப்பந்தல் நின்றது; நடந்து முடிந்த மணவினைக்குச் சாட்சி சொன்ன நெருப்பும் நின்றது. “மிஸ்டர்...மிஸ்டர்!” பெயரைச் சொல்லி அழைக்க இயலாத தயக்கத்தோடும் தவிப்போடும் வலது பக்கத் தலையை திசை திருப்பினாள். சூடு பொறுக்காமல் சூன்யத்தில் தவித்தாள். கண்களை கசக்கிக் கொண்டாள். ஊகூம்; அவள் அழவில்லை!- அவள் ஏன் அழப் போகிறாள்? ரேவதியா, கொக்கா?-சிரித்தாள்!...

கூர்க்கா ‘சல்யூட்’ அடித்தான்.

புதிதாக மலர்ந்த ரோஜாப்பூவாக, ரேவதி டாக்டர் தலை வாசலில் நின்றாள்.

சரேலென்று பாய்ந்து பறந்து கொண்டிருக்கிறது, ‘மாருதி’!