பக்கம்:அவள் ஒரு மோகனம்.pdf/38

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

ஆமாங்க... ஞானசீலன்!...” வாய்விட்டுச் செருமினாள், டாக்டர் ரேவதி.

சொகுசான கார், சொகுசை விட்டு கிறீச்சிட்டு நின்றது.

“அம்மா உங்கள் உடம்புக்கு ஒண்ணும் இல்லீங்களே?”

ஏறிட்டு விழித்தாள்; பதற்றம்; சோகப் பெருமூச்சு. கண்கள் தளும்பின. சமாளித்துக் கொண்டு “எனக்கு எதுவும் ஆகிடல்லே; ஆகவும் விட மாட்டேன். வண்டியை வேகப்படுத்துங்க, பெரியவரே!” என்று ஆணையிட்டாள் ரேவதி.

அவளுக்கு இப்போது சுதந்திரமான வெளிக் காற்று தேவைப்பட்டது.

கண்ணாடிகளை இறக்கினாள்.

மனித மந்தை கிளை பரப்பி முட்டி மோதிக் கொண்டும், முட்டாமல் விலகிக் கொண்டும் தன்னை போர்வைக்குள் முடங்கியபடி நகர்ந்தது; விரைந்தது; ஓடியது.

அதோ, ரேவதி மருத்துவ மனை.

வாசலில் என்ன கூட்டம்?

பொது நல மருத்துவப் பணியின் உயிர்ப் பண்பான மனிதாபிமான உணர்வுகள் இப்போதும் டாக்டர் ரேவதியிடம் மேலோங்கி நிற்கவே, வெகு பதட்டத்தோடும் மிகப் பரபரப்போடும் இறங்கினாள்.

‘யாருக்கோ, என்னவோ விபத்து ஏற்பட்டிருக்க வேணும்! தெய்வமே; அவரோட உயிருக்கு எந்த விதமான ஆபத்தும் இல்லாமல் நல்லபடியாக காப்பாத்திக் கொடுத்திடு!’-ஜப மாலைக்குப் பதிலாகத்தான் அவள் அப்போது தனது கழுத்துச் சங்கிலியை உருட்டியவளாகப் பிரார்த்தித்துக் கொண்டாளோ?