பக்கம்:அவள் ஒரு மோகனம்.pdf/39

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

25


கண்கள் கலங்க, கூட்டத்தைத் துழாவினாள்.

கூட்டத்தில் நின்றவர்களிலே யாருக்கும் எந்த அடியும் பட்டதாகத் தெரியவில்லை! அப்படியென்றால், ஏன் இந்தக் கூட்டம்?

பார்வையைத் திருப்பினாள். பகீரென்றது. அந்தக் கறுப்பு நிற வாடகைக் கார் வெறுமையாகக் காட்சி தரவே, அவளது இதயத் துடிப்பு அதிகரித்தது.

“யாரோ ஒருவர் என் வண்டியிலே சவாரி வந்தாருங்க; மனிதர் பின் கதவை சரியாகச் சாத்திக்கிடல்லே போலிருக்கு . போதும் போதாததுக்குப் போதையில வேற இருந்திருக்காரு. பனகல் பூங்கா முக்கத்திலே வண்டி வேகமாய்த் திரும்பறப்ப, கதவு படார்னு தன்னாலே திறந்துக்கிடுச்சி. அவர் உருண்டு கீழே விழுந்திட்டார். பாவம், அடிபட்ட ஆளை இப்பத்தான் உள்ளாற கைத்தாங்கலாய் அழைச்சிக்கிணு போயிருக்காங்க, அம்மா!”

வண்டி ஓட்டுனர் இரக்கத்தின் விலங்கு பூட்டியிருந்த கைகளைப் பிசைந்து கொண்டு கலவரத்தோடு நின்றார்.

நெருப்பில் இடறி விழுந்து விட்டவளைப் போன்று பதை பதைத்த வண்ணம் உள்ளே விரைந்தாள் டாக்டர் ரேவதி.