பக்கம்:அவள் ஒரு மோகனம்.pdf/53

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

39


அவளது இளமை மாறாமலும் மாற விடாமலும் பேணிப் பாதுகாத்த மகத்தான பெருமைக்கு உரியவள் ஆயிற்றே, அவள்!

ராவ் வந்தார்; கையில் ‘காயகல்பம்’ டைரி; முகத்தில் தெளிவு கலந்த அச்சம்.

அவள் விழிப்புடன் இருந்தாள். தெளிந்த போதத்தில் ஆர்வம் இருந்தது; ஆவலும் இருந்தது. “ராவ், பேசுங்க” என்றாள். அதிகாரமான தோரணை, மாமூல் விஷயம்தான்.

“ஞானசீலனைப் பற்றி...”

ரேவதி குறுக்கிட்டாள்: “ராவ், மிஸ்டர் ஞானசீலன்னு ஆரம்பிங்க; அவர் யாராக இருந்தாலும், அவரோட பேருக்கு மரியாதை கொடுத்தாக வேணும். ஊம், சொல்லுங்க!”

ராவ் சுதாரித்துக் கொண்டார். “மிஸ்டர் ஞானசீலனைப் பற்றி இன்னிக்குத்தான் நம்பகமான தகவல்கள் கிடைச்சுதுங்க; அவருக்கு நாளது தேதி வரை மறு கலியாணம் ஆகலையாம்; தங்குமிடம் எதுவும் கிடையாது; நாடோடியாட்டம் சுத்திக்கினு இருக்கார்; பூர்வீகச் சொத்து, வீடு வாசல் சகலமும் காலி!... குடிக்கிறது மட்டும்தான் கெட்ட பழக்கம்னு சொல்ல முடியாதாம்! கெட்ட கெட்ட பொம்பளைங்களோட கெட்ட சகவாசமும் உண்டாம்!... இம்மாதிரியான கதை இனி மேலும் தொடர் கதையானால், அவரைக் கீழ்ப்பாக்கத்திலேதான் சந்திக்க வேண்டி வருமாம்!...” நிறுத்தினார், ராவ்.

“கதை அவ்வளவுதானா?”

“உண்மை அவ்வளவுதாங்க!”

“ஓகோ! இதெல்லாம் யார் மூலம் உங்களுக்கு. கிடைச்சுது, ராவ்?”