பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

க. சமுத்திரம் 29 உடனே தலைமைக் குமாஸ்தா, 'அப்படியும் சொல்லிட முடியாது. இந்த வருஷந்தான் என் பொண்ணு எஸ்.எஸ்.எல்.ஸி. எழுதி இருக்கிறாள். அவள் எழுதுற இங்லிஷ் அவ்வளவு அருமை. எனக்கே புரிய மாட்டாக்கு" என்றார். அவர் பேசிய தோரணை, தன் மகளுக்கு, அந்த அலுவலகத்திலேயே ஒரு வேலை கிடைப்பதற்கு முன்னுரை கூறுவதுபோல் தோன்றியது. நடுங்கும் கைகளிலேயே, பைலை வைத்துக் கொண்டு நின்ற வசந்தியைப் பொருட்படுத்தாமலே, இருவரும் பேசிக்கொண்டே இருந்தார்கள். வசந்தி, தன் இருப்பிடத்திற்கு நகரப் போனாள். அதைப் பார்த்த தலைமைக் குமாஸ்தா, "ஆமா. உன் மனசில என்னதான் நினைச்சிக்கிட்ட? கொஞ்ச நேரம் காத்து நிற்க முடியாதோ? கொண்டா ஃபைலை." என்று கத்தினார். அவரிடம் பேசிக் கொண்டிருந்த நாற்பது வயதுக்காரி, பெரிதாகச் சிரித்தாள். பைல்களில் தலைகளை விட்டுக் கொண்டிருந்த சில குமாஸ்தாக்கள், தத்தம் தலைகளை உயர்த்திவிட்டு பிறகு எதுவுமே நடக்காததுபோல் குனிந்து கொண்டார்கள். தலைமைக் குமாஸ்தா மீண்டும் கத்தினார். "ஆமா.. எந்த ஸ்கூல்ல படித்தே?” வசந்தி, ஒரு பெயரைச் சொன்னாள். "எஸ்.எஸ்.எல்.ஸிலே எவ்வளவு மார்க் எடுத்தே?” வசந்தி எடுத்தது குறைவான மார்க். ஆகையால் பதிலளிக்காமல் தலையைக் குனிந்து கொண்டாள். தலைமை விடவில்லை. "நான் சொல்றது காதுல விழல? எத்தனை மார்க்கு?" "இருநூற்று எண்பது." “அதான கேட்டேன். இங்லீஷ்ல எவ்வளவு? அட. சொல்லும்மா. நான் சொல்றது காதுல விழல? சொல்லு:"