பொறி ஒன்பது
சாத்தையன் தலையில் விழுந்த இரும்புக் கம்பியைப் பிடித்திருந்த கை அருணாசலத்தினுடையதாகவோ ராஜநாயகத்தினுடையதாகவோ, அல்லது கண்ணப்பனுடையதாகவோ கூட இருந்திருந்தால், அல்லியின் பதட்டம் தணிய வழி இருந்திருக்கும். பேராபத்திலிருந்து தப்பி விட்ட நிம்மதி ஏற்படவும் காரணமாக இருந்திருக்கும். ஆனால் அது இன்னாசியாக இருந்து விடவே, சற்று முன் ‘அல்லி’ என்று கூவிக்கொண்டு வெறிக் கண்களுடன் தன் மீது பாய்ந்த அதே மிருகம், தன் முதல் பாய்ச்சல் குறி தவறிவிட, இன்னொரு பாய்ச்சலுக்குத் தயார்செய்து கொண்டிருப்பது போலத்தான் அவளது மருண்டு போன கண்களுக்குப் பட்டது. ரத்த வெள்ளத்தில் கிடந்த சாத்தையன் ஞாபகமே அவளுக்கு இல்லை. உண்மையில், தன் முன் நிற்பது யார், எவன் என்ற தனிப்பட்ட நபர்களைப் பற்றிய உணர்வு நிலையைப் பெற்றவளாகவே இல்லை அல்லி.
அன்று, திருக்கார்த்திகை தினத்தன்று மாங்குடியை விட்டுக் கிளம்பி நான்கு வயல்களைக் கடந்து வண்டிப் பாதையில் கால் வைத்தபோது ஏற்பட்ட முதல் ஆபத்திலிருந்து சங்கிலித்தொடராக ஏற்பட்டு வரும் அத்தனை சோதனைகளுக்கும் ஒரு சிகரமான, தன்னையே அழித்து