பொறி இரண்டு:
அல்லியின் உடல் நடுங்கியது. பயம் என்பதை அறியாமல் வளர்ந்தவள் அவள். ஆனால் இப்பொழுது அவள் பயத்தால் விதிர் விதிர்த்தாள்.
“எந்தராத்திரியிலும் எங்கு வேண்டுமானாலும்போவேன். பயம் என்னடி, பயம்? நான் யாருக்காக அல்லது எதுக்காகப் பயப்படவேண்டும்?’ என்று கேட்கும் துணிச்சல் அவளுக்கிருந்தது. அது முன்பு. அவளுடைய சிநேகிதி செந்தாமரையிடம்தான் அல்லி அப்படிக்கேட்டாள். ‘முன்னிரவிலும், அதிகாலையிலும் குளத்துப் பக்கமெல்லாம் போகிறாயா? தனியாகப் போய்வர உனக்குப் பயம் இல்லையா?’ என்று தோழி கேட்டபோதுதான் அல்லி அவ்வாறு பேசினாள்.
‘அர்த்த ராத்திரியில் சுடுகாட்டுக்கு வேண்டுமானாலும் போய் வருவேன், பேய் பிசாசைக் கண்டால்கூட நான் பயப்பட மாட்டேன்!” என்றும் அவள் சொன்னாள்.
அதே அல்லி ஊரை எண்ணிப் பயப்பட நேர்ந்தது. அவளைப் பொறுத்தவரை, சுடுகாட்டைவிட மாங்குடி மோசமாகிவிட்டது. அவளுக்கு உற்ற தோழியாக இருந்தவளும், அவள் வாழ்ந்து பெரியவளாக ஊக்கமும்