பக்கம்:ஆண்டாள்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

ஆண்டாள்


கம்மல், மாட்டல், காலணி என்று இப்படி வகை வகையான பலவகை அணிகலன்களையும் நாங்கள் அணிந்துகொள்வோம். நல்ல பட்டாடைகளை உடுப்போம் அதற்குப் பிறகு நிறைய நெய் ஊற்றப்பட்டிருப்பதால் முழங்கைவரை வழிந்தோடும் நெய்யுடைய பாற்சோறும் அகார அடிசிலை எல்லோருமாகக் கூடியிருந்து உண்டு, உள்ளம் குளிர இருப்போம்.

கூடாரை வெல்லும்சீர் கோவிந்தா! உன்தன்னைப்
பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சன்மானம்
நாடு புகழும் பரிசினால் நனறாகச்
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே யென்றனைய பல்கலனும் யாம்அணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பால்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடியிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்

-திருப்பாவை : 27

ஆயர் மகளிர்க்கு இப்பயன் விளைவதோடு, அவர்கள் மேற் கொண்ட நோன்பால் மழைபெய்து நாடு செழித்துப் பசுக்கள் பல்கிப் பால்வளம் தருகின்றனவாம் என்க. அப்பாடல் வருமாறு :

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றிநீர் ஆடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து
ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்

-திருப்பாவை : 3
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/122&oldid=1157561" இலிருந்து மீள்விக்கப்பட்டது