பக்கம்:ஆண்மை.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

ஆண்மை

ஸ்ரீனிவாசனும், ருக்மிணியும் துவந்த யுத்தத்தில் கலந்து கொள்ளவில்லை. அதைப் பற்றி இருவருக்கும் தெரியாது. பரமேச்வர ஐயர் ஒவ்வொரு வருஷமும், தன் புத்திரனைச் சம்பந்தி வீட்டிற்கு அனுப்பி வைப்பார். பிறகு இல்லாத நோணாவட்டம் எல்லாம் சொல்லிக் கொண்டு, வருஷம் பூராவாகவும் பேச, அது ஒரு ‘ஐட்டம் நியூஸ்’. ஸ்ரீனிவாசனுக்குச் சம்பந்தி வீட்டிற்குப் போவதென்றால், ரொம்பக் குஷி. விஷயம் ருக்மிணி இருக்கிறாள் என்ற நினைப்பினால் அல்ல, பக்ஷணம் கிடைக்கும்; நாலைந்து நாள் ‘மாப்பிள்ளை’, ‘மாப்பிள்ளை’ என்ற உபசாரம்; விளையாட்டு, அப்பாவின் கோபமும், அடியும் எட்டாத இடம்; மேலும் விளையாடுவதற்கு நிரம்பப் பயல்கள், இதுதான்; மாமா வீடு என்றால் வெகு குஷி.

இப்படி பத்து வருஷங்கள் கழிந்தன.
சம்பந்திச் சண்டை ஓயவில்லை.

சீமாவும், சின்னப் பையனாக இருந்து, மெதுவாகப் பெரிய மனிதனாகி விட்டான். பரமேச்வர ஐயருக்குப் பையன் வளர, வளர குதூஹலம். ஆத்தூர்ப் பண்ணைக்குப் ‘புத்தி கற்பிக்க’ சாந்தி முகூர்த்தம் என்ற கடைசித் துருப்பை உபயோகிக்க வேண்டிய காலம் நெருங்குவதில், மிகுந்த சந்தோஷம். ஆத்தூர்ப் பயலை என்ன செய்கிறேன் பார் என்று தம் மனைவியிடம், வீரம் பேசினார். அவருடைய சகதர்மிணியும், தனது கணவன் வீர புருஷன் என்பதில் மிகுதியும் களித்தாள்.

சீமாவும் மாமனார் வீட்டுக்குப் போவது படிப்படியாகத் தடைபட்டுப் போயிற்று. முதலில் கொஞ்சம் வருத்தந்தான். ஆனால், சீமா புஸ்தகம் படித்தவனல்லவா? அதில், ‘தந்தை சொல் மிக்க மந்திரமில்லை’ என்று படித்திருக்கிறான். தந்தையின் சொல் மந்திரத்தை விட, கை மந்திரத்தில் அதிக அனுபவம் உண்டு. சீமாவும், மாமனாரை வெறுக்க ஆரம்பித்தான். காரணமும் கொஞ்சம் உண்டு; ருக்மிணி முன் போல், அவனுடன் விளையாடுவதில்லை. ஓடி ஒளிய ஆரம்பித்து விட்டாள். ருக்மிணியின் தகப்பனாரும், அவன் அங்கு ஒரு தடவை சென்றிருந்த பொழுது, தகப்பனாரைப் பற்றிப் பேசிக் கொண்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்மை.pdf/11&oldid=1694189" இலிருந்து மீள்விக்கப்பட்டது