ஆண்மை
17
விம்மலுடன் “மன்னியுங்கோ” என்ற வார்த்தை வெளி வந்தது.
சீமாவிற்கு ருக்மிணி தன்னை மறக்கவில்லை என்பதில் பரிபூரண ஆனந்தம்.
“ருக்மிணி நீ என்னைச் சீமா என்று கூப்பிட்டால்தான்…!” என்று அவள் சத்தியம் செய்வதற்கு எடுத்த கையைத் தனது கரத்தில் பற்றினான். அவள் கை எவ்வளவு மிருவாக, புஷ்பம் போல் இருக்கிறது. உள்ளத்தில் இருந்து, ஏதோ ஒன்று உடல் பூராவாகப் பாய்வது போல் இருந்தது.
ருக்மிணியும் கரத்தை இழுக்கவில்லை. இழுக்க இயலாதபடி வலுவிழந்தாள். கூச்சமும், நாணமும் முகத்தைச் சிவக்கச் செய்தன.
“நீங்கள் இப்படிக் கேட்டால்…”
“சொன்னால்தான்…”
“சீமா” என்று மெதுவாக, அவன் காதுடன் காது வைத்துக் கூறினாள்… அதரங்கள் என்றும் மலராத விதம் மலர்ந்தன.
சீமாவின் கரங்கள் அவள் இடையில், மெதுவாகச் சுருண்டன.
அவள் இடையிலிருந்த குடம், கை சோர்ந்து மணலுக்கு நழுவியது.
“ருக்மிணி! நான் சொன்னபடி கேட்பாயோ!”
“இன்னும் சந்தேகமா… நீங்கள் கூப்பிடும் இடத்திற்கு வருகிறேன்.”
அவள் கண்களில் ஒரு ஜோதி பிரகாசித்தது. ஒரு கொஞ்சுதலும், குழைவும் காணப்பட்டது.
ருக்மிணி அவனது மார்பில் சாய்ந்தாள்.
“ருக்மிணி நான் வந்ததாக எவருக்கும் தெரியக் கூடாது. உன் அப்பாவிற்குக் கூட…”
“ஆகட்டும்.”
இருவரும் தழுவிக் கொண்டனர்.
2