18
ஆண்மை
பிரிய மனம் வரவில்லை. விலக மனம் வரவில்லை.
“ருக்மிணி!” என்றான்.
“சீமா” என்றாள்.
அவள் கரத்தில் முத்தமிட்டான்.
அவளைச் சுற்றியிருந்த கரங்களை மீட்டான்.
குழந்தை ருக்மிணி நாணத்தினால், தழுதழுத்த குரலில் மெதுவாக “நான்” என்றாள்.
சடக்கென்று சீமா விலக்கிக் கொண்டு, “போய் வருகிறேன் கண்ணே” என்று, வெகுவேகமாகச் சென்றான்.
ருக்மிணிக்குத் துக்கம் நெஞ்சையடைத்தது. அவன் முதுகில் வைத்த கண் மாறாமல், பார்த்துக் கொண்டிருந்தாள். விம்மி, விம்மி மூச்சு வந்து கொண்டிருந்தது.
ஆற்றின் அக்கரையை அடைந்ததும், சீமா திரும்பிப் பார்த்தான்.
ருக்மிணி அவன் இருந்த திக்கில் கும்பிட்டாள்.
ருக்மிணியின் நெஞ்சில் மறுபடியும் மேகம் கவ்வியது.
நடந்த கனவு மறைந்தது.
III
ருக்மிணி கணவனுக்குக் கொடுத்த வாக்குத் தத்தத்தை மறக்கவில்லை. பெற்றோரிடம் கூறவில்லை. ஆனால், இயற்கை கூறாது விடவில்லை. ருக்மிணி தனது கணவனின் நினைவை மறவாத வண்ணம், இயற்கை கருணை புரிந்தது.
இரண்டு மாத காலங்களில், இயற்கையின் கோளாறுகள் அவள் மீது தோன்றலாயின. வீட்டிற்குத் தெரியாது.
பண்ணை ஐயர் திடுக்கிட்டுப் போய் விட்டார். சீமாவைப் பற்றி அவர் நினைக்கவேயில்லை. தனது குற்றம் என்று உள்ளம் கூறியது. க்ஷாத்திரத்தை எல்லாம் மகளின் மீது தாக்கினார். “யார் என்று சொல்? பயலைத் தொலைத்து விடுகிறேன்” என்று