பக்கம்:ஆண்மை.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நன்மை பயக்குமெனின்

பூவையாப் பிள்ளை (முழுப் பெயர் பூமிநாத பிள்ளை) பேட்டையில் பெரிய லேவா தேவிக்காரர். மூன்று வருஷம் கொளும்பில் வியாபாரம், அவரை ஒரு தூக்குத் தூக்கியது. அத்துடன், ஒரு பத்துக் கோட்டை நிலம்; நெல் விலை முன்பு உயர்ந்த பொழுது, ஒரு தட்டு. இவைகளினால் சாலைத் தெரு முதலாளி என்று பெயர். தெய்வ பக்தி, உலக நடவடிக்கைகளைப் பொறுத்து கோவிலுக்குப் போதல், நீண்ட பூஜை முதலியன எல்லாம் உண்டு.

பக்கத்து வீட்டுச் சட்டைநாத பிள்ளை புஸ்தகப் புழு. இவருக்கு இருந்த சொத்து வகையறாக்களைப் புஸ்தகமாக மாற்றுவதில் நிபுணர். வீட்டிலேயே ஒரு புஸ்தக சாலை. கிடைக்காத புஸ்தகங்கள், வேண்டாத புஸ்தகங்கள், வேண்டிய புஸ்தகங்கள், பழைய பிரதிகள், அபூர்வ ஏடுகள் எல்லாம் இவர் வீட்டில் பார்க்கலாம். ஏதோ ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார் நீண்ட காலமாக. அவர் புஸ்தகம் எழுதுவது வெகு காலமாக வெறும் சமாச்சாரமாக இருந்து, பழங் கதையாக மாறி விட்டது. இவருக்கு உலகமே புஸ்தகம்; அறம், பொருள், இன்பம், வீடு எல்லாம் அதுதான்.

இந்த இரண்டு பேர்களும் அத்தியந்த நண்பர்கள். சாயங்காலம் நான்கு மணி முதல் சட்டைநாதப் பிள்ளை, பூவையாப் பிள்ளையின் பேச்சு இன்பத்தை நாடுவார். இருவரும் வெளியே உலாவி வருவார்கள். இதுதான் இவர்கள் சந்திக்கும் நேரம். பணத்தைப் புஸ்தகமாக மாற்றும் சட்டைநாத பிள்ளை, தமது நண்பரிடம் கடன் வாங்கி யிருந்தார் என்றால் அதிசயமல்ல. கொஞ்சம் நாளாகி விட்டது.

சட்டைநாத பிள்ளை தனது புஸ்தகக் கூட்டத்தில், அளவளாவிக் கொண்டிருக்கிறார். அவருடைய பெண் தங்கம் ஒரு காகிதத் துண்டைக் கொண்டு வந்து கொடுத்து, “மேல வீட்டுப் பெரியப்பா குடுத்தாஹ” என்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்மை.pdf/29&oldid=1694333" இலிருந்து மீள்விக்கப்பட்டது