நன்மை பயக்குமெனின்
29
“உயர் திரு அண்ணாச்சி அவர்களுக்கு, நம்ம விஷயத்தைக் கொஞ்சம் தாங்கள் துரிசாப் பார்க்கணும். இன்று சாயங்காலம் மேற்படி விஷயத்திற்கு வருவேன். மறக்கப்படாது.
இப்படிக்குத் தங்கள்,
உயிர் நண்பன்
பூவையாப் பிள்ளை.”
என்று வாசித்தார்.
“சரி. அண்ணாச்சிக்கு நாம் கொஞ்சம் பணம் கொடுக்கணும். நெருக்கிறாஹ. ஏட்டி நீ சவுந்திரத்தை அனுப்பு” என்று சொல்லி விட்டார்.
கொடுக்க வேண்டியது 500ரூ. அதிகமாக 200ரூ சேர்த்துப் பாங்கிற்குச் செக் எழுதியாகி விட்டது. எதற்கு? எல்லாம் புஸ்தகத்திற்குத்தான்.
“ஏலே! சவுந்தரம், இதைப் போய் மாத்திக்கிட்டு சுறுக்கா வா. மணி பதினொண்ணு ஆயிட்டுதே! போ! போ!” என்று சொல்லி விட்டுக் கையிலிருந்த ‘சொந்த அவஸ்தா’ முதல் பாகத்தில் தன்னை மறந்து விட்டார்.
ஒரு மணி நேரம் கழிந்தது. சவுந்திரமும் வந்து விட்டான்.
எல்லாம் 100ரூ. நோட்டுக்கள். சட்டைநாத பிள்ளை தன்னை மறந்தவராக இருந்தாலும், ஒவ்வொரு காரியத்தையும் நுணுக்கமாகச் செய்பவர். வந்த நோட்டுக்கள் நம்பரை எல்லாம், குறித்துக் கொண்டார். அப்பொழுது ஜரத்துஷ்டிரனுடைய மொழிகளில்தான் மனம். அதை யோசித்துக் கொண்டே, ஐந்திற்குப் பதிலாக ஆறு நோட்டுக்களை எடுத்துக் கொண்டு, பூவையாப் பிள்ளையைப் பார்க்கச் சென்றார்.
பூமிநாத பிள்ளையின் பூஜை முடியும் சமயம்.
“அண்ணாச்சி வரணும், வரணும். ஏது இந்தப் பக்கமே காணமே. ஒரு நிமிட்” என்று பூஜையின் ‘கீயரை’ மாற்றி வேகத்தை அதிகப்படுத்தினார். “மந்திரமாவது நீறு. துதிக்கப் படுவது நீறு இத்யாதி, இத்யாதி; முற்றிற்று; திருச்சிற்றம்-