புதிய நந்தன்
நந்தா சாம்பானை, நந்த நாயனாராக்க, சிதம்பரத்தில் அக்கினிப் புடம் போட்ட பின்னர், வெகு காலம் சென்றது.
அந்தப் பெருமையிலேயே, ஆதனூர் சந்தோஷ—அல்லது துக்க—சாகரத்தில் மூழ்கி அப்படியே மெய் மறந்தது.
இங்கிலீஷ் சாம்ராஜ்யம் வந்த சங்கதி கூடத் தெரியாது. அப்படிப்பட்ட நெடுந் தூக்கம்.
இப்பொழுது, ஆதனூரிலே ரயில்வே ஸ்டேஷன், வெற்றிலை பாக்குக் கடை என்ற ஷாப்பு; காப்பி ஹோட்டல் என்ற இத்யாதி சின்னங்கள் வந்து விட்டன. எப்படி வந்தன என்ற சமாசாரம் யாருக்கும் தெரியாது.
ஆனால், நந்தன் பறைச்சேரியில் விடை பெற்றுக் கொண்ட பிறகு, பறைச்சேரிக்கு என்னமோ, கதி மோட்சம் கிடையாது. பழைய பறைச்சேரிதான். பழைய கள்ளுக்கடைதான். ஆனால், இப்பொழுது பழைய வேதியரின் வழி, வழி வந்த புதிய வேதியரின், ஆள் மூலம் குத்தகை. சேரிக்குப் புறம்பாக அல்லது தீண்டக் கூடாது என்ற கருத்துடனோ, மரியாதையான தூரத்திலே, ஒரு முனிஸிபல் விளக்கு. அதை ஏற்றுவதைப் பற்றி ஒருவருக்கும் தெரியாது. சேரிப் பறையர்கள், ஆண்டையின் அடிமைகள், அத்துடன் அவர்களுக்குத் தெரியாத வெள்ளைத் துரைகளின் அடிமைகள்.
அந்தப் பழைய வேதியரின் வாழையடி வாழையாக வந்த (அவர்கள் குல முறை கிளத்துப் படலம் எந்தப் புராணத்திலும் இல்லை) வேதியர் அக்கிரகாரத்தில் பெரிய பண்ணை. 1000 வேலி நிலம் இத்யாதி வகையறா. இது மட்டுமல்ல. ஒரு பென்ஷன் பெற்ற ஸப் ரிஜிஸ்திரார் விஸ்வநாத ச்ரௌதி: இவருக்குப் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திலும், இறந்து போன ஸனாதன