பக்கம்:ஆண்மை.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

iv

வாழ்ந்த ஒரு வாலிபன், திடீர் என்று உலகத்தில் இயல்பாக இருந்து வரும் கொடுமைகளையும், அநீதிகளையும், சமூகத்தின் வக்கர விசித்திரங்களையும் கண்டு, ஆவேசமாக, கண்டதைத் தனது மன இருட்டில் தோய்த்துச் சொல்லிய பேய்க் கனவுகளாகும். எனது கதைகளின், அதாவது, பூர்வ கதைகளின் கரு அதுதான். அவற்றில், கதைக்கு உரிய, கதைப் பின்னல் கிடையா. அவற்றிற்கு ஆரம்பம், முடிவு என்ற நிலைகளும், பெரும்பான்மையாகக் கிடையா. மன அவசத்தின் உருவகம் கதைகள் என்பதை ஒப்புக் கொள்ளுவதானால், அவை கதைகள் ஆகும். இம்மாதிரியான முறையை அனுஷ்டித்து, மேல்நாட்டில் கதைகள் பிரசுரமாவது சகஜம். அந்த முறையை, முதல் முதலாகத் தமிழில் இறக்குமதி செய்த பொறுப்பு அல்லது பொறுப்பின்மை என்னுடையதாகும்.

மணிக்கொடிப் பத்திரிகையானது வெளி வரும் முன்பு, எத்தனையோ இலக்கியப் பத்திரிகைகள் இருக்கத்தான் செய்தன. ஆனால், புதிய பரிசீலனைகளுக்கு இடங் கொடுக்கும், உற்சாகமூட்டும், வரவேற்கும் பத்திரிகைகள் அதற்கு முன்போ, பின்போ கிடையாது. அந்தப் பத்திரிகையை ஆரம்பித்த லக்ஷியவாதியான கே.ஸ்ரீனிவாசன், அவருடைய அந்தக் ‘குற்றத்திற்காக’ (?) பாஷைப் பிரஷ்டம் செய்யப்பட்டவர் போல, வேற்று மாகாணத்திலே, வேற்று பாஷையிலே பத்திரிகைத் தொழில் நடத்தும் பாக்கியம் கிடைக்கப் பெற்று, வாழ்ந்து வருகிறார், காலத்துக்கேற்றபடி உடுக்கடிக்கும் கோட்டான்களும், ஆவேசத்தோடு சீறுவது போல 'பம்மாத்து' செய்து கொண்டு இருக்கும் கிழட்டுப் புவிகளும், பாஷையையும், பாஷையின் வளர்ச்சியையும் பாழ்படுத்திக் கொண்டு இருக்கும்படி அனுமதித்து வரும் தமிழரின் பாஷா அபிமானத்தைக் கோவில் கட்டித்தான் கும்பிட வேண்டும். அன்று மறுமலர்ச்சி என்ற ஒரு வார்த்தை புதிய வேகமும், பொருளும் கொண்டது. அதைச் சிலர் வரவேற்றார்கள். பலர் கேலி செய்தார்கள் ; பெரும்பான்மையோர், அதைப் பற்றி அறியாதிருந்தார்கள். மணிக்கொடி பொருளாதார நிர்ப்பந்தம் என்ற நபரால் சிசுஹத்தி செய்யப்பட்டு, அசிரத்தை என்ற முனிசிப்பல் குப்பைத் தொட்டியில் எறியப்பட்டது. மூச்சுப் பேச்சற்றுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்மை.pdf/5&oldid=1694162" இலிருந்து மீள்விக்கப்பட்டது