52
புதிய நந்தன்
ரயில்வே ஸ்டேஷன் பக்கத்திலிருந்த மைதானத்தில், ஒரு மேடை; கியாஸ் லைட்; இத்தியாதி, இத்தியாதி, பெருங் கூட்டம். வெற்றி கொள்ள ஆசைப்படும் சனாதனமும் அதில் கலந்திருக்கிறது.
கருப்பன் கிழவன், ‘மவாத்துமா’ கிழவரைப் பார்க்க ஆசை. கண் எது? அதென்னமோ? குருடருக்கு என்ன செய்ய முடியுமோ?
தட்டுத் தடுமாறிக் கொண்டு வந்தான். எங்கோ தன் மகன் சப்தம் போல் இருக்கிறது என்று தடுமாறிக் கொண்டு ஓடினான்.
மாலைகள் வந்து விட்டனவா என்று கவனித்து ஓடிக் கொண்டிருக்கும் ராமநாதன் சற்றுப் பின்னால் வந்தான், குறுக்குப் பாதை வழியாகத் தோழர் நரசிங்கம் எங்கிருந்தோ வந்து கொண்டிருந்தான்.
நெற்றிக் கண்ணைத் திறந்த சிவபிரான் போல் தலைப்பு வெளிச்சத்தைப் போட்டுக் கொண்டு, கோஷித்துக் கொண்டு வருகிறது மதராஸ் மெயில். ஆதனூர் அதன் மரியாதைக்குக் குறைந்தது; நிற்காது. நாற்பது மைல் வேகம்.
என்ஜின் டிரைவர் விஸிலை ஊதுகிறான்; கோஷிக்கிறான். குருடன் கம்பி வழியாகவே கடக்கிறான். மனம் குழம்பி விட்டதா?
தூரத்திலிருந்து இருவர், அவனைக் கண்டு விட்டார்கள். மகனும், மருமகனும்; இயற்கைச் சட்டத்தின்படி அப்படித்தான். சமுதாயம் என்ன வேண்டுமானாலும், சொல்லிக் கொள்ளட்டும்.
வேகமாக ஓடி வருகின்றனர்.
வெளிச்சம்; வெளிச்சம்.
மூவரும் சேரும் சமயம். இழுத்து விடலாம்.
“ஐயோ!”
ஹதம். ரத்தக் களரி.