பக்கம்:ஆண்மை.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

புதிய கந்தப் புராணம்

ஆற்றுப் படலம்
தாமிர வருணி நதி எப்பொழுதும் வற்றாது என்பது சம்பிரதாயம். அந்தச் சம்பிரதாயத்திற்குப் பங்கம், இந்தக் கலி காலத்தில் வந்து விடுமோ என்று பயந்து, முனிசிபல் உப நதிகள் பல அதில் வந்து சேருகின்றன.

நகரப் படலம்
ந்தப் புனிதமான நதி தீரத்திலே, வண்ணாரப்பேட்டை என்ற திவ்யப் பிரதேசம் ஒன்று உண்டு. சாட்சி சொன்ன கோமுட்டிச் செட்டி கண்ட குதிரையைப் போல், பட்டணத்தின் தொந்திரவுகளுடன், கிராமத்தின் அழகையும் பெற்றிருந்தது. அதாவது, தமிழர்களில் நாகரிக வைதீகர்கள் மாதிரி, குடுமியும், விபூதியும், ருத்திராட்சமும், ஸெர்ஜ் ஸர்ட்டும் ஐக்கியப்பட்டுப் பரிணமிக்கும்—தமிழ் நாட்டு வைதீகர்கள் மாதிரி, இரண்டையும் பெற்ற ஓர் ஸ்தலமாக இருந்தது.

இதன் ஸ்தல புராணம், கபாடபுரம் கடலுடன் ஐக்கியப்படும் பொழுது, மறையா விட்டாலும். சமீபத்தில் வந்த தாமிரவருணியின் வெள்ளத்தினால், ஆற்றில் நித்திய மோன சமாதியடைந்தது என்பது, வண்ணாரப் பேட்டை முதியோர்களின் வாக்கு.

இந்தக் கிராம-நகரில் கூட கோபுரங்களும், மாட மாளிகைகளும் இல்லாவிடினும், கூரை வீடுகளுடன், தோளோடு தோள் கொடுத்து நிற்கும் காறை வீடுகளும் உண்டு. இவையெல்லாம், அவ்வூர் பெரியார்களின் வாசஸ்தலம் என்பது உண்மையிலும் உண்மை.

இவ்வூரில் கோவில்களும் உண்டு. அதாவது பட்சபாதமில்லாமல். சிவபிரான் விஷ்ணுவாக முயன்ற—(அது ஊர்க்காரர்களின் முயற்சி; இந்த உரிமை சிதம்பரத் தலத்தில் மட்டுமில்லை)—ஒரு கோவில். “கூறு சங்கு தோல் முரசு கொட்டோசை”யல்லாமல், மற்றொன்றும் அறியாத வேறொரு சிவபிரான். அப்புறம் ஒரு பேராச்சி.—எங்கள் ஸ்தலத்திலிருக்கும் மக்களின் ரத்த வெறியையும் வீரத்தையும் எடுத்துக் காட்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்மை.pdf/59&oldid=1694477" இலிருந்து மீள்விக்கப்பட்டது