பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 ஆனந்த முதல் ஆனந்த வரை பொருத்தப் பெற்று வழிபடுகின்ற அன்பர்களுக்கு வரம் தரும் கடவுளாக, பிற தெய்வங்களோடு தெய்வ உருவாக, சிறப்போடு பூசனை ஏற்று நிமிர்ந்து நிற்கின்றது. கோயிலுக்கு நான் செல்லும்தோறும் அங்குச் சில நிமிடங்கள் என்னை மறந்து நிற்பேன். அந்தச் சிலையை அக்கோயிலில் கொண்டுவைக்கும் போது நான் ஊரில் இல்லை. எப்படியோ யாருடைய முயற்சியாலோ அது உள்ளிடம் பெற்றுவிட்டது. என்றாலும் என்னை அந்தச் சிலை ஈர்த்துக் கொண்டது. அதன் அருகில் செல்லும் போது அப்படியே நிற்ப்ேன். அது வாய்திறந்து பேசுமானால் மண் மூடிக் கிடந்த தன்னை நிமிரச் செய்து இந்த நிலைக்குக் கொணர்ந்த என்னை வாழ்த்தாதிருக்குமா! எனக்கு வேண்டாம் அந்த வாழ்த்தும் போற்றலும். ஆயினும் அவ்வுருவைக் காணும் தோறும் என் உள்ளங் குளிரும். எந்தக் காலத்தில் யாரால் செய்யப்பெற்ற உருவமோ அது. அந்தக் காலத்தில் எத்தனை பேர் அதன் மலரடியில் தவங்கிடந்து வரம் பெற்றார்களோ இடையில் அதன் நிலைகெட மண்ணுள் மூழ்கி எத்தனை ஆண்டுகள் அது தவம் கிடந்ததோ! இதோ இன்று மறுபடியும் அச்சிலை வரந்தரு தெய்வமாக அம்பலவாணர் திருக்கோயிலில் அழகுற விளங்குகிறது. அதே வேளையில் இன்னும் நிலை இழந்த தெய்வச் சிலைகள் பல அந்த இடிந்த கோயிலைச் சுற்றிக் கிடக்கின்றன; அவற்றை நோக்க இரக்கம்தான் வருகிறது. இப்போது நான் அடிக்கடி ஊருக்குப் போவதில்லை. போகும் போதெல்லாம் அந்த இடிந்த கோயில் பக்கம் செல்ல வேண்டும் என நினைப்பதுண்டு; முடிவதில்லை. என்றாலும் வழியிலே உள்ள சோலைகளை யெல்லாம் மக்கள் வெட்டி வீழ்த்திவிட்டமையால் எங்கள் வீட்டு வாயிற்படியிலிருந்தே அந்தக் கோயிலைக் காணமுடியும். நான் தெருவில் சில விநாடி நின்று, அக் கோயிலை வணங்கி உள்ளே செல்வேன். ஆம்! அந்த இடிந்த கோயிலும் அதில் உள்ள கல்வெட்டுகளும், நிலை கெட்ட சிலைகளும் எத்தனை எத்தனை உண்மை களைத் தம்முள் மூடிவைத்திருக்கின்றனவோ? யார் அறிவார்!