பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 ஆனந்த முதல் ஆனந்த வரை மேலும் வீட்டின் கிணற்றடியில் வந்து மூழ்குவதிலும், பரக்க ஒடும் பாலாற்று ஊற்று நீரில் மூழ்குவது சிறப்பல்லவா? என் அன்னையும் அப்படியே அன்று மாலை ஊற்று நீரில் மூழ்கி வீட்டிற்கு வந்தார்கள். அவர்கள் கழுத்தில் ஒரு செம்பவள மாலை ஒன்றுதான் இருந்தது. அதன் நுனியில் பொன் இழைத்த ஒரு பெரும் உத்திராட்சமும் அழகாக அமைக்கப் பட்டிருந்தது. இரவு எட்டு மணிக்கு அந்த உத்திராட்சம் வீழ்ந்து விட்டதை அன்னையார் அறிந்தார்கள். அந்த வேளையில் அதை எங்கு சென்று தேடுவது? நான் வீட்டில் தான் இருந்தேன். என்றாலும் நன்கு இருட்டிய இரவில் எங்கு சென்று தேடுவது? விடியற்காலையில் எழுந்து அவர்கள் குளித்த அந்த ஊற்று நீரில் சென்று தேடுமாறு கூறினார்கள். வேறு எங்கே வீழ்ந்திருந்தாலும் அது வீழ்ந்த ஒலி கேட்டிருக் கும் என்றும், அவ்வாறு கேளாமையின் குளிக்கும் காலத்தில் ஊற்று நீரில்தான் வீழ்ந்திருக்கும் என்றும், ஆயினும் தான் குளித்த பிறகு மாலை ஐந்து மணிக்கு மேல்-எத்தனையோ பேர் வந்து மூழ்கிச் சென்றிருப்பார்கள் என்றும், அது யாரிடத் தில் கிடைத்ததோ-பெற்றவர்கள் கொடுப்பார்களோ, கொடார்களோ என்றும், இறுதியாக நம்முடையதானால் எப்படியும் கிடைக்கும், விடியற்காலை சென்று தேடிப்பார்’ என்றும் கூறினார்கள். நானும் சரி என்று படுத்துக் கொண் டேன். மறுநாள் நன்கு புலருவதன் முன்பே என்னை அன்னை யார் எழுப்பி விட்டார்கள். நேராக அவர்கள் குளித்ததாகக் கூறிய ஊற்றுத் துறைக்குச் சென்றேன். நன்றாகப் புலராத முன் பொழுதாதலின்-இருட்டில் மணலில் ஒன்றும் தெரிய வில்லை, சிறிதுநேரம் உட்கார்ந்திருந்தேன்; நன்கு விடிந்தது. நான் எழுந்து அந்த ஊற்றில் துவைக்கும் கல்லின் பக்கத்தில் உட்கார்ந்து குளிக்கத் தோண்டிய பள்ளத்தின் அருகில் சென்றேன். யாரும் தண்ணிரைக் கலக்கவில்லை. கலக்கி