பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 ஆனந்த முதல்ஆனந்த வரை வேண்டிக் கொண்டனர். அவர்கள் யாரோ? பிறகு அவர்களை நான் காணவே இல்லை. ஆயினும் அவர்கள் காட்டிய பரிவும் பாசமும் பக்தியும் பண்பும் இன்றும் என்முன் நிழலிடுகின்றன. அந்தத் துறவு நிலையில்ே நான் நிலைத் திருப்பேனாயின் தற்போது எவ்வாறு இருப்பேன் என்று நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. எங்கோ இமயமலைச் சாரலில் சிவானந்தர் ஆசிரமத்தில் நானும் ஒரு சிவானந்த மாகத் தங்கி இருந்திருப்பேனோ அன்றி வேறு எங்கிருந் திருப்பேனோ? தணிகையில் இறங்கினேன். மாலை 3 மணி இருக்கும். மலைக்குப் போகும் வழியில் அஞ்சல் நிலையம் இருந்தது. அங்கேயே உட்கார்ந்துகொண்டு எடுத்துச்சென்ற தாளில் எழுதுகோலால் நான்கைந்து பக்கங்கள் என் உள்ளக் கிடக்கைகளை யெல்லாம் கொட்டி எழுதி, நான் துறவியாக முடிவுசெய்துவிட்டேன் என்பதையும் விளக்கி, என்னைத் தடுக்க முயற்சி செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டு அழுத நிலையில் ஒரு உறைவாங்கி அதில் இட்டு அன்னை யாரின் முகவரியையும் எழுதிப் பெட்டியில் இட்டுவிட்டேன். தணிகை முருகன் என் நினைவு தொடங்கப்பெற்ற நாளிலிருந்து நெஞ்சில் இருப்பவன். இன்பம் துன்பம் இரண்டும் அவன் அளிப்பவை. எனவேதான் அங்கே முதலில் சென்று அவன் அருள்பெற முனைந்தேன். குளத்தங் கரையில் வந்ததும் என் நிலை தளர்வுற்றது. படியில் சிறிது நேரம் உட்கார்ந்தேன். பிறகு மேல் எழுத்து கால் கழுவித் தூய்மை செய்துகொண்டு மெல்ல மலைமேல் ஏறினேன். வழிநெடுக உள்ள குரங்குகளும் பறவைகளும் ஒலி எழுப்பிக்கொண் டிருந்தன. மாலை வேளை பூசைக்குரிய ஏற்பாடுகள் நடைப் பெற்றுக் கொண்டிருந்தன. நல்ல அந்த வேளையில், அவனை யன்றி வேறொன்றும் அறியா நிலையில் நான் உச்சியை அடைந்து கோயிலை வலம்வந்து உள் சென்றேன்.