பக்கம்:ஆபரேஷனுக்கு அஞ்சவேண்டாம்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் ஜனத்தொகையைக் குறைப்பதற்காக மட்டும் கொண்டு வரப்பட்டதல்ல. பெற்றோர்களின் ஆரோக்கியமும், குழந்தைகளின் நல்வாழ்வும் குடும்பத்தின் சுபீட்சமும் அத்திட்டத்தின் முக்கிய லட்சியங்களாகும். அத்திட்டத்தின் அவசியத்தைப்பற்றி மக்கள் படிப்படியாக உணர்ந்து ஆதரித்து வருகிறார்கள். இன்னும் பெரு வாரியாக மக்கள் இத்திட்டத்தைப் பற்றி நன்கு அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் உயர்திரு. திருகூடசுந்தரம் அவர்கள் 'ஆப்பரேஷனுக்கு அஞ்ச வேண்டாம்' என்ற இந்நூலை எழுதியுள்ளார். வெகுகாலமாக இவர் இத்திட்டத்தைப் பற்றி கட்டுரைகள், நாடகங்கள் எழுதியும், கூட்டங்களில் பேசியும் விளக்கி வருகிறார். ஆகவே ஆப்பரேஷன் செய்யும் முறையைப்பற்றியும், அதற்குப் பிறகு எப்படி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றியும் பாமர மக்கள் கூட நன்றாக உணர்ந்து கொள்ளும்படி மிகவும் தெளிவாகவும், எளிய முறையிலும் இந்நூலை எழுதியிருக்கிறார். சில இயற்கையான வழிகளையும் இதில் விளக்கியிருக்கிறார். ஒவ்வொருவரும் படித்துப் பயன் பெறக்கூடிய இந்த நூலை எழுதிய ஆசிரியருக்கு என் பாராட்டுக்கள்.

கு. காமராஜ்