இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
“ஆமாம். இந்தக் கலைஞன் அரை வயிற்றுச் சோற்றுக்கு தினம் தினம் அந்தர் பல்டி அடிக்க வேண்டியிருக்குது!”
“சோறு சாப்பிட்டீங்களா?“
“இனிமே எங்கே சாப்பிடறது? ஏகாதசிதான்.”
“நாங்க சாப்பாடு கொண்டாந்திருக்கோம். சாப்பிடறீங்களா?”
“புளியோதரையா?”
“எப்படித் தெரியும்?”
“அதான் மணக்குதே!”
வாசலை அடையும் போது மழை வேகம் தணிந்திருந்தது. படிக்கட்டுகளின் அடிவாரத்தில் படுத்திருந்த பசி நாய் ஒன்று எழுந்து நின்று 'படபட'வென்று காதடித்து வாலைக் குழைத்தது.
“ஜிம்மி!” என்று அழைத்தவன், “எப்பவும் இங்கத்தான் கிடக்கும். நான் அரைப்பட்டினி, இது முழுப் பட்டினி!” என்று சிரித்துக் கொண்டே போய்க் கதவைத் திறந்தான் சாமண்ணா.
பாப்பா வலது காலை எடுத்து வைத்து அந்த வீட்டிற்குள் சென்றாள்.
10