பூவேலி கிராமத்தில் பாரதத் திருநாளை முன்னிட்டு பதினெட்டு நாள் உற்சவம். எல்லைக்கோடியிலுள்ள தர்மராஜா கோயிலில் தாரையும் தப்பட்டையும் அதிர்வேட்டுமாக அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது.
“ஊர்ல என்ன விசேஷம்?” என்று பாப்பாவிடம் கேட்டான்" சாமண்ணா.
“தர்மராஜா திருநாள். கோயிலுக்குப் பக்கத்துலே பந்தல் போட்டு, பாரதம் படிச்சு கூத்து நடத்தறாங்க. இன்னிக்கு அர்ஜுனன் தபஸ்......”
“அப்பாவைக் காணோமே, இன்னும்?”
“வர நேரம்தான், அதுக்குள்ளே நீங்க குளிச்சு ரெடியாயிருங்க. சோப்பு கொண்டு வரேன். அதோ வெந்நீர் ரூம்ல தண்ணி காஞ்சிட்டிருக்கு, பாருங்க”' என்றாள் பாப்பா.
சாமண்ணா சந்தன சோப்பில் குளித்து முடித்து வாசனையோடு வெளியே வந்தபோது கண்ணைக் கசக்கிக் கொண்டான்.
“சோப்பு கண்ணுல பட்டுட்டுதா?”
“இல்லே, அடுப்பிலந்து வந்த புகைச்சல்...!”
“இலுப்ப விறகு, ஈரம் காயலே போலிருக்கு” என்றவள், "இந்தாங்க சீப்பு.....”
உள்ளே சமையல்கட்டிலிருந்து பாயச வாசனை மணத்தது. சாமண்ணாவின் உள்குரல்: ‘பாயசத்துக்கு என்ன விசேஷம்? திருவிழாவுக்காக இருக்குமோ? அல்லது எனக்காக ஸ்பெஷலா?’
வாசலில் யாரோ பேச்சுக் குரல் கேட்கவே பாப்பா எட்டிப் பார்த்தாள்.
40