“அவளுடைய சாட்சாத் மகள்தான் இப்ப இவனுக்கு ஜாமீன் கொடுத்திருக்கா. அந்தப் பொண்ணுக்கு பாப்பான்னு பேரு”
“அந்தப் பெண்ணா!”
“ஆமாம்; அம்மாவை அப்படியே உரிச்சு வச்சிருக்கா. கழுத்திலே மூக்கிலே மாட்டிண்டு வந்து நிக்கறயே நீ: அவள் ஒண்ணுமே போட்டுக்கலை! ஒரு ஜோடி தோடு. ஒரு சின்னச் சங்கிலி! அழகுன்னா அப்படி ஒரு அழகு! அசந்துட்டேன்...”
“தெரியுமே! இவ்வளவு காலைல கோர்ட்டுக்குப் போறேன்னு அத்தரும் புனுகுமா நீங்க கிளம்பறப்பவே நினைச்சேன். அந்தப் பெண்ணைப் பாக்கறதுக்குத்தான் அத்தனை அவசரமா புறப்பட்டேலே?”
“ஏண்டி எனக்கென்ன வயசு? அந்தப் பொண்ணுக்கு என்ன வயசு? என்னைப் போய்....”
“சபலம்தானே? இந்த ஆம்பிளைகளை நம்பவே கூடாது. அதுசரி; அந்தப் பெண்ணுக்கும் சர்மண்ணாவுக்கும் அப்படி என்ன உறவாம்? அவனை மோகிக்கிறாளாமா...?” என்று கேட்டவள் சட்டெனப் பேச்சை நிறுத்தினாள், வாசலில் ஒரு நிழல் தெரிந்து அவள் திடுக்கிட்டாள்.
55