பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

45


அரசன்

பட்டயம் கொடுத்த அரசன் பெயர் விஜய ந்ரிப துங்கவர்மன் (வரி 45). ந்ரிபதுங்கவர்மன் (வரி 74), ந்ரிபதுங்க (வரி 24, 25, 32), துங்கவர்மன் (வரி 42) என்று பல உருவங்களில் குறிக்கப் பெற்றுள்ளது. இவன் நல்ல குணவான்; மூன்று உலகுக்குமரசன்; உதய சூரியன் போன்று ஒளிபடைத்தவன்; பாண்டியனுக்கு ஒருசமயம் படையுதவி செய்தவன் (செ. 16); பகை மன்னர் கூட்டத்தை அரிசிலாற்றங்கரைப் போரில் எரித்தவன்; புவனேசுவரனாகிய இவன் இளமை முதற்கொண்டு அரசர்களுள் புகழ் பொருந்தியவன்; இவன் புகழ் இராமன் போன்று பிற இடங்களிலும் பரவியுள்ளது (செ. 17:)

இவன் தந்தை-மூன்றாம் நந்திவர்மன்.

இவன் தாய்-சங்கா. இவள் முராரிக்கு இலக்குமி போலநந்திவர்மனுக்கு மனைவியாவள்; ராஷ்டிரகூட குலத்தில் தோன்றியவள்; உலகம் போலப் பொறையுடையவள்; தாய் போல் குடிமக்களால் விரும்பப்பட்டவள்; மிக்க அழகு உள்ளவள்; அரசனது நற்பேறே உருவெடுத்தாற் போன்றவள்; மதி காந்தி கலாதிகளையுடையவள்.

விண்ணப்பித்தவன்

நிருபதுங்கன் காலத்தில் வாகூர்ப்பகுதியில் ஆண்டு வந்தவன் வேசாலிப் பேரரையன் எனப் பெற்றான் (வரி 46). இவன் மார்த்தாண்டன் (செ. 18) என்ற இயற்பெயர் உடையவன்; நிலைதாங்கி என்ற சிறப்புப் பெயருடையவன்; குரு குலத்தில் பிறத்தவன்; தன்னைச் சரணடைந்த பிரஜைகளைக் காப்பவன்; உலகத்துக்குச் சந்திரன் போன்று திலகமாக விளங்குபவன்; சமுத்திரம்போல் கம்பீரமுடையவன்; சூரியன் போல் உலகை ரக்ஷிப்பவன்; உலகத்தில் நிலைபெற்றவன். இவனே ஆணத்தி வழியாக இச்செப்பேடுகளில் கண்ட அறத்தைச் செய்தான் (செ. 21).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுப்_பேழை.pdf/52&oldid=1388522" இலிருந்து மீள்விக்கப்பட்டது