பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 ) ஆரணிய காண்ட ஆய்வு

மொழி. சான்றோர் கவியிலும் (செய்யுளிலும்) உவமை, உருவகம் முதலிய அணிகள் உள்ளன.

2. ஆன்ற பொருள் தருதல் = ஆற்றில் ஆரம், அகில், முத்து, மணிகள் முதலிய உயர்ந்த பொருள்கள் அடித்துக்கொண்டு வரப்படுகின்றன. சான்றோர் கவியிலும் உயரிய கருத்துகள் (பொருள்கள்) அமைந்துள்ளன.

3. புலத்திற்றாதல் = புலம் என்பதற்கு நிலம், புலமை அறிவு என்னும் பொருள்கள் உண்டு. ஆறு பாய்ச்சல் நிலங்களை இருபக்கங்களிலும் கொண்டுள்ளது. கவியிலும் புலவர்களின் புலமை நயம் பொருந்தியிருக்கும்.

4. அவி அகத்துறைகள் தாங்கல் - அவிப் பொருளை நெருப்பில் இட்டுச் செய்யும் வேள்விக் குண்டங்களைக் கரையின் பக்கங்களில் ஆறு உடைத்தா யிருத்தல். கவி அகப்பொருள் (இலக்கணத்) துறைகள் பலவற்றை உடைத்தா யிருத்தல்.

5. ஐந்திணை நெறி அளாவல் = குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்து வகை நிலப் பகுதிகள் வழியாகவும் ஆறு செல்லுதல். இந்த ஐந்து திணைகளைப் பற்றிய செய்திகள் (அகன் ஐந்திணை) கவியில் இடம் பெற்றிருத்தல்.

6. சவி உறத் தெளிதல் = ஆற்று நீர் பளபளப்பான ஒளியுடன் தெளிந்திருத்தல். சான்றோரின் கவி தெளிந்த தெளிவான பொருள் உடையதாயிருத்தல். அத்யாத்ம இராமாயணத்தில், சான்றோரின் நல்ல உள்ளம் போல் ஆற்றின் நீர் தெளிவாக உள்ளது. என்று கூறப்பட்டிருப்பது. ஈண்டு ஒப்புநோக்கத்தக்கதாகும். கம்பர் முதன்மையாக இதைக் கூறியுள்ளார்.