பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/132

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மத உரிமைகளும் அரசின் கடமைகளும்

ஆளுமை நிலையில் அரசுக்கு எத்தனையோ கடமைகள் உண்டு; பொறுப்புகளும் உண்டு. அவற்றுள் சட்டத்தால் வழங்கப்பெறும் பொதுவுரிமைகளை மக்களில் ஒரு பகுதியினர் பயன்படுத்தும் பொழுது அவற்றால் அதே மக்களில் மறுபகுதியினர் தம் உரிமைகளுக்கு ஊறு நேராவண்ணம் கண்காணிப்பதும் அதன் தலையாய கடமைகளில் ஒன்று. இப்படிக் கண்காணிப்பதில் தவறு நேருமானால், அல்லது சட்டம் இடங்கொடுக்கும் வகையிலேயே புறக்கணிப்பு நிகழுமானால், மக்களில் சிலர் தங்களின் உரிமைகளைப் பயன்படுத்தி மகிழ்கின்ற அதே நேரத்தில், வேறு சிலர் அவற்றால் துன்பப்படவும் நேர்ந்துவிடுகின்றது. இதை விளக்க ஆங்கிலத்திலே கையாள்கின்ற ஓர் உவமையை இங்குக் கூறலாம். “ஒருவர் கைவிசிக் கொண்டு நடப்பதில் யாருக்கும் தடையிருக்க முடியாது; ஆனால் அவர் கை தான் இன்னொருவர் மூக்கில் பட்டுவிடக் கூடாது”.

பொதுவாக ஒரு குடியரசு நாட்டில், அதுவும் குறிப்பாக இந்நாட்டில், மதங்களுக்கு வழங்கப்பெறும் உரிமைகள், சலுகைகள் இப்படி அளவுக்கு மீறின வகையில் இருப்பது, மக்களுக்கு அரசு விளைவிக்கும் பிறவகை நலன்களுக்கு ஓர் இடையூறாகவே இருக்கிறது. மதம் ஒரு கொள்கை அல்லது ஒரு கடைப்பிடியாக இருக்கலாம். ஆனால் அது சட்டமாக்கப்பட்டுவிடக் கூடாது. அரசு ஆளுமைகளில் அது குறுக்கிடவே கூடாது. இதனால்தான் உருசியா போலும்