பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/134

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்


பற்றியனவாகவே இருக்கும். சுருக்கமாகச் சொன்னால் அவர்கள் அங்குள்ள பழைய கட்டிடங்களை இடித்துத் தள்ளிவிட்டுப் புதுக் கட்டிடங்களைக் கட்டிக் கொண்டிருக்கின்றார்கள்; நாமோ இங்குள்ள பழைய கட்டிடங்களையே இங்கு மங்குமாகப் பூசியும் வெள்ளையடித்தும் புதிய கட்டிடங்கள் என்று பேசுவது மல்லாமல் பீற்றிக்கொள்ளவும் செய்கின்றோம். இந்த இடர்ப்பாடுகள் அனைத்துக்கும் இங்குள்ள மத ஆளுமைகளே கரணியங்கள். அவை மக்களை மட்டும் மூடர்களாக்கவில்லை; ஆட்சியையும் முடமாக்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால் இவற்றை எந்தக் கொம்பனாலும் களைய முடியாதபடி சட்ட வல்லமைகள் அவற்றுக்குப் பாதுகாப்பளித்துக் கொண்டிருக்கின்றன. எனவேதான் இந்தியா தன்னுரிமை பெற்று இருபத்தேழு ஆண்டுகளாகியும் எந்த ஒரு துறையிலும் உருப்படியாக முன்னேற முடியாமல் திக்கித் திணறிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், அதே மதங்களைக் காவலாகக் கொண்டு, மக்கள் பெருக்கத்தில் மட்டும் அளவுக்கு மீறிய சுமையை ஏற்றபடி முக்கி முணகிக்கொண்டு கிடக்கின்றது. இந்த நுட்பத்தை விளங்கிக் கொண்டோ அல்லது கொள்ளாமலோ – நம் தலைவர்கள் – எனப்படுபவர்கள் – அந்த மத உரிமைகளில் கைவைக்க வக்கில்லாமல் – வைத்தால் பிழைப்புக் கெடுமே என்னும் அச்சத்தால் – வாய்க்கு வந்தபடி சீர்திருத்தம் பேசுவதும் பேசியவற்றிற்கு நேர்மாறாகச் செய்வதுமாகக் காலத்தைக் கடத்தி வருகின்றனர். நம் அரசியல் அமைப்புப்படி எந்த ஒரு துறையில் எதைச் செய்தாலும் அதற்கு மதத்தின் ஒப்புதல் இருந்தே ஆக வேண்டும். இதனால்தான் பார்ப்பனியத்தின் ஆணிவேரை யாராலும் அசைக்க முடியவில்லை. ஏனெனில் பார்ப்பணியம் இந்த நாட்டில் முழுக்க முழுக்க மதத்தின் வேர்களில்தான் தன் முட்டைகளை இட்டுக் கொண்டுள்ளது. எனவே அந்த நிலை தகர்க்கப்படும் வரை மதத்திற்கு மாறுபடவோ, அல்லது பார்ப்பனியத்திற்கு எதிராகவோ நாம் எதனையும் – சொல்லி விடலாம் – ஆனால் செய்துவிட முடியாது.

இந்த நிலைகள் இந்திய நாட்டின் முழுமையையும் பொறுத்த அளவில் எப்படியிருந்தாலும், நம் தமிழகத்தைப் பொறுத்த அளவிலாகிலும், பகுத்தறிவாளர்கள்(!) ஆளுகின்றதாக நாம் (!) பேசிக் கொள்ளுகின்றோமே, அவர்கள் ஆட்சியிலாகிலும், அவர்கள் முன்னிலையில் சட்டத்திற்கு மாறுபடாத வகையில், சிற்சில நடைமுறைகளுக்கான கருத்துரைகளை, வேண்டுகோளாக வைக்க விரும்புகின்றோம். இவ் வேண்டுகோள்களில் பெரும்பாலானவை அவர்கள் ஆட்சிக்கு வராதபொழுது, அஃதாவது பேராயக் கட்சி –