பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/83

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

81


ஆகும். அரசியல் நிலையில் இவர்கள் முழு ஆட்சியுரிமையின்றியும், மொழி உரிமையின்றியும் அடிமைப்பட்டுக் கிடக்கின்றனர். பொருளியல் நிலையில் இவர்கள் வடநாட்டுத் தென்னாட்டு முதலாளிமார்களால் நலம் உறிஞ்சப்பட்டு ஏழைமை நிலையுற்றுக் கிடக்கின்றனர். புறத்தே பார்ப்பவர்களுக்கு இம் முத்துறையிலும் இவர்கள் பிற மக்களைப் போலவே உரிமை பெற்றிருப்பதாகத் தோன்றினும், அகத்தே நோக்குவார்க்கே இவர்களின் இரங்கத் தக்க நிலை தெளிவாகத் தெரியவரும். இப்பொழுது அரசியல் கட்சிகள் எல்லாம் சேர்ந்து எழுப்பும் சிக்கல்களுக்கெல்லாம் தனிப்பட்ட எவரும் பொறுப்பாகாதது மட்டுமன்றி, இம் மூன்று வகையான அடிமை நிலைகளே முழுப் பொறுப்பான பெருத்த காரணங்களாகும். மேலே கூறப்பெற்ற இம்மூன்று விடுதலைகளிலும் தமிழர் பெறவேண்டிய முதல் விடுதலை குமுகாய விடுதலையே ஆகும். குமுகாயத்தில் ஓரின மக்கள் சமநிலைப்படுத்தப்பட்டாலன்றி அவர்களாலேயோ, அவர்களைத் தூண்டிவிட்டோ நடத்தும் அல்லது நடத்தப்பெறும் எந்தவகையான அரசியல், பொருளியல் போராட்டமும் நேரடியாக வன்றி மறைமுகமாகவேனும் ஒடுக்கப் பெறும் என்பது வரலாறு நமக்குக் காட்டுகின்ற உண்மை. இதற்கு, வழிவழியாய் ஆங்காங்குள்ள வலிந்த அல்லது பெருத்த சூழ்ச்சிகளைக் கொண்ட ஓரினத்தால் ஆட்டிவைக்கப் பெற்றுக், குமுகாய நிலையில் இன்னும் முன்னேற்றம் கொள்ளாத தமிழர் இனமும், ஆப்பிரிக்க அமெரிக்க நாட்டு நீக்ரோ இனமும் கண்காணும் சான்றுகளாகும்.

இவ்வுண்மைகளை இன்னும் சற்றுத் தெளிவாகப் பார்ப்போமானால், பார்ப்பனரின் வலிந்த சூழ்ச்சியும் வல்லாண்மையும் குமுகாயத் துறையில் மட்டுமின்றி, அரசியலிலும் பொருளியலிலுங்கூட மிகவும் மேம்பட்ட போக்கிலேயே ஊடுருவி நிற்கின்றன. இதற்கு மாறாக இன்று வடநாட்டில் பார்ப்பனரைவிட வடவரே மிக்க அதிகாரமுற்றவர்களாக இருப்பதால், பார்ப்பனரின் போராட்டம் சமயம் என்ற போர்வையிலோ அறம் என்ற பெயரிலோ இக்கால் நடத்தப்பெற்று வருகின்றது.

தமிழர் குமுகாய விடுதலையின்றிக் கடந்த ஈராயிரம் ஆண்டுகளாகத் தாழ்த்தப்பட்டுக் கிடக்கின்றனர். அதற்கு முன்பு இருந்தே ஆரியப் பார்ப்பனர் அக்கால் இருந்த ஏமாளி அரசர்களையும், இரக்கவுணர்வால் பேதையராக விருந்த பொது மக்களையும் தம்வயப்படுத்தி வேள்வி, கணியம் முதலிய மந்திர மாயங்களாலும், ஏமாற்று அரசியல் நடவடிக்கைகளாலும் தமிழரை முற்றும் அடிமைப்படுத்தினர். தூய்மையுடன் தனித்து வழங்கிய