பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

தமிழர் பண்பாடு


90). மற்றும் மதுரையில் இருந்து வந்த பருத்தி ஆடைகள் ஆகியவற்றைக் குறிப்பிட்டுள்ளார். (Arthasastra : Jolly and Schmidt. ii. 26.119)


சந்திரகுப்தனும் தென் இந்தியாவும் :

கி.மு. நான்காம் நூற்றாண்டின் கடைசி கால் நூற்றாண்டில் உலகம் அறிந்த நனிமிகு புகழ்வாய்ந்த சந்திரகுப்தன், ஒரு நூற்றாண்டின் கால்கூறு காலத்திய ஒளிமயமான ஆட்சிக்குப் பின்னர், இந்தியப் பேரரசர் பலரையும் போலவே, வைராக்கிய மாகிய நோயால் திடுமெனப் பற்றிக் கொள்ளப்பட்டு, ஒரே இரவில் வாளையும் முடியையும் துறந்து சமணத்துறவியாகி பத்ரபாகுவின் 12,000 மாணவர்களில் ஒருவராகிவிட்டான். தன் குருவோடும், தன்னொத்த மாணவர்களோடும், மைசூர் மாநிலம், ஹாசன் மாவட்டத்தில் உள்ள சரவண பெல்கோலாவைக் கால்கடுக்க நடந்து அடைந்தான். ஏனையோர் ஆங்கிருந்து பாண்டிய, சோழ நாடுகளுக்குச் சென்றனராக, பத்ரபாகுவும், சந்திரகுப்தனும் அங்கேயே தங்கிவிட்டனர். ஆங்குப் பிச்சைக்காரனாக மாறிவிட்ட அப்பேரரசன், தன் குரு இறக்கும் வரை, அவருக்குத் தேவையானவற்றை அளித்துப் பணிவிடை செய்து கொண்டிருந்தார். சந்திரகுப்தன், தன் ஆசிரியருக்குப் பின்னர்ப் பன்னிரண்டு ஆண்டுகள் உயிர் வாழ்ந்திருந்தான். பின்னர்த் , தான் உயிர் வாழ்ந்த பயன் கிட்டிவிட்டது : தன் உடல் தனக்கு இனிப் பயன் இல்லை என உணர்ந்ததும், சமண சமயமுறையாம், பசியோடிருந்து வடக்கிருந்து உயிர் துறத்தலாம் “சல்லெக்ஹனம்” மேற்கொண்டு உயிர் துறந்தான். ஒரு பேரரசின் வாழ்க்கை , மறைவுகள் குறித்து நாம் கருத்தில் கொள்ளத் தேவையில்லை, ஆனால், இப்போது சாதுக்கள் என அழைக்கப்படும் ஆயிரக் கணக்கானவர், இன்று வழிபாட்டிடங்களுக்குச் சென்று திரும்பும் பல்லாயிரவர் போல வடநாடு விடுத்துத் தென்னாடு வந்தது பற்றியே கருத்தில் கொள்ளுதல் வேண்டும். இச்சமண முனிவர்கள் தமிழ்நாடு மலைச்சரிவுகளில் உள்ள இயற்கையான குகைகளில் வாழ்ந்து, படித்துப் பொருள் காண்பதன் மூலம்,